இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு: இயேசுவின் பிறப்பதற்கு முன்னதாக, கி.மு.,700ல் ஏசாயா என்ற தீர்க்கதரிசி, கன்னிகை கர்ப்பதியாகி ஒரு குமாரனை பெறுவாள் என்றார். மேலும்,கடவுள் வானில் ஒரு நட்சத்திர அடையாளத்தை கொடுப்பார் என்றார். இயேசு பிறப்பதற்கு முன்னதாக, கி.மு.,500ல் மீகா என்ற தீர்க்கதரிசி யூதேயா நாட்டிலுள்ள(இஸ்ரேல்)பெத்லகேமில், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் வருகிறார் என்றார்.
இயேசு என்றால் என்ன அர்த்தம்?
இயேசு என்பதற்கு ரட்சகர், விடுவிப்பவர், காப்பாற்றுபவர், அதிசயமானவர், ஆலோசனை கடவுள், வல்லமை தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்று பொருள். கிறிஸ்து என்றால் தீர்க்கதரிசி, வரும் காரியங்களை முன்னுரைப்பவர் என அர்த்தம்.கிறிஸ்துமஸ் காலத்தில் , வீடுகளில் குடில்கள் அமைத்து இயேசுவின் பிறப்பை சித்தரிப்பர். மாட்டுத்தொழுவங்கள் மின்னொளியில் ஜொலிக்கும். முதன்முதலாக, இங்கிலாந்தில் தான் கி.பி.,1722ல் புனித பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் குடிலை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தை சேர்ந்த கார்ஸ்லே என்பவர் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை கி.பி.,1843ல் தன் நண்பர் ஹென்றி ஹோலோவுக்கு அனுப்பினார். பிறகு இங்கிலாந்து அரச குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கினர். அமெரிக்காவில் வாழ்த்து அட்டைகளுக்காக மட்டும் 25 கோடி டாலர் வரை செலவழிக்கின்றனர். இங்கிலாந்தை 1841ல், அல்பெர்டினாஸ் என்ற மன்னர் ஆட்சி செய்தார். இவர் விண்ட்சர் என்ற தனது கோட்டையில் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார். இதற்கு முன்பு ஜெர்மனி, ஆஸ்திரியா உட்பட ஐரோப்பிய பல நாடுகளில் பிர் என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.
இயேசு பிறந்த ஜெருசலேம்: யூதமதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களின் புனித இடமாக விளங்குவது ஜெருசலேம். மத்திய தரைக்கடலையும் சாக்கடலையும் பிரிக்கிற வளைவில் இந்நகரம் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்றுத் திகழ்கிற புண்ணியத்தலம். அமைதி, சாந்தம், சமாதானம் என்று கடவுளை எபிரேய மக்கள் அழைத்தனர். சுமேரிய மொழியில் ஜெரு என்றால் நகரம் . சலேம் என்றால் அமைதி. அமைதியான நகரம் என்பது இதன் பொருள். இந்நகரம் கடவுளால் நிறுவப்பட்டது. ஜெருசலேம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதற்பகுதி கி.பி.,16ம் நூற்றாண்டில், மன்னர் சுலைமானால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த பழைய நகரம். இப்பகுதி பைபிளில் கூறப்பட்டுள்ள ஜெருசலேமை உள்ளடக்கியுள்ளது. இரண்டாம் பகுதி பழைய நகரின் வடக்கே ஒலிவக்குன்றின் சரிவில் அரேபியர்களின் குடியிருப்புகள் அடங்கியுள்ள இடம். இயேசுகிறிஸ்து அடிக்கடி சென்று போதித்த பெத்தானியா இப்பகுதியில் உள்ளது. மூன்றாவது, பழைய நகரின் மேற்கிலும் தெற்கிலும் ச ஐரோப்பிய அமெரிக்காக் கட்டடக்கலையின் பிரதிபலிப்பைக் கொண்ட கட்டடங்கள் உள்ள யூதர்களின் பகுதி. இங்குள்ள புனித கல்லறை ஆலயம் கிறிஸ்தவர்களின் மிக முக்கிய புண்ணிய இடமாக விளங்குகிறது. பைபிளில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் போதனை, அவரது எழுச்சி, உயிர்த்தெழுதல், விண்ணுலகம் அடைதல் முதலிய முக்கிய நிகழ்ச்சிகள் ஜெருசலேமில் நடைபெற்றதாக கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் நம்புகின்றனர்.
ஆன்மிக நிகழ்வுகள் நடந்த அநேக இடங்கள் ஜெருசலேமில் உள்ளன. சிலோவாம், பெதத்தா குளங்கள், பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்து காட்டிய இடங்களாகும். சீலோவாம் குளத்தில் இயேசு ஒரு குருடனுக்குப் பார்வை வரும்படி குணமாக்கினார். பைபிளில் யோவான் ஒன்பதாவது அதிகாரத்தில் இந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள தேவாலயங்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றோடு தொடர்புடையன. ஓமரின் தேவாலயம், தாவீதின் கல்லறை ஆகியவை இங்கு உள்ளன. இந்நகரின் வடகிழக்குப் பகுதியில் கெத்சமெனே தோட்டம் உள்ளது. இங்கு காணப்படும் சில மரங்கள் இயேசுவின் காலத்திலிருந்தே இருக்கின்றன. பிலாத்துதான் இயேசுவைப் பிடித்து நியாயம் விசாரித்தவன். அவனது மண்டபம் இங்குள்ளது. இவ்வூரின் வடகிழக்கில் கல்வாரி மலை இருக்கிறது. இங்கு தான் இயேசுவை சிலுவையில் அறைந்தனர். கல்வாரி மலை அருகிலுள்ள கல்லறை தோட்டத்தில் இயேசுவை அடக்கம் பண்ணிய கல்லறை உள்ளது. இங்கு தான் இயேசு உயிர்த்தெழவும் செய்தார். இயேசு கிறிஸ்து அவருடைய சீடர்களோடு திருவிருந்தில் (ராப்போஜனம்) பங்கேற்ற இடத்தை மேல்வீட்டறை என்கின்றனர். பைபிளில் கூறப்பட்டிருக்கும் மிகப் பழமையான அநேக இடங்கள் இன்றும் ஜெருசலேமில் உள்ளன.
-எல்.பிரைட், தேவகோட்டை
பாவம் போக்க வந்த பரிகாரி: பாவம் என்னும் நோயை தீர்த்து வைக்கும் பரிகாரியாக இயேசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார். கிறிஸ்து என்றால் மேசியா என்றும் தீர்க்கதரிசி என்றும் அர்த்தம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்டஸ் மாஸ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து இந்த வார்த்தை பிறந்தது. கி.பி.,336ல் முதன்முறையாக ரோமாபுரியில் இவ்விழா கொண்டாடப்பட்டது. அனைத்து உயிரினங்களிலும் மனுக்குலம் மட்டுமே பகுத்தறிவு உள்ள உயிரினமாக விளங்குகிறது. பாவத்தை அறிந்தும், தெரிந்தும், அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்தும் உலகமக்கள் பாவத்தை தொடர்ந்து செய்ன்றனர். பிறக்கும் போதே மனிதனோடு பாவம் தோன்றி விடுகிறது. அதை போக்க பலவித கர்ம, தர்ம காரியங்களை செய்கிறான். ஆனால், எவ்வித பலனும் கிடைக்காமல் மீண்டும் பாவத்திலேயே நிலைத்திருக்கிறான். இந்நிலையில் கடவுள், தான் படைத்த மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்க பூமியில் தோன்றினார்.
கிறிஸ்து பிறப்பின் சிறப்பு: கிறிஸ்துவின் பிறப்பு என்பது ஆண், பெண் திருமண உறவின் மூலம் பிறக்கும் மனிதனை போல அல்லாமல், கடவுளின் மகனாக புனிதத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது. இவ்வுலக மக்கள், பிறரை அழிப்பதன் மூலம் மகிழ்வதும், தாங்கள் மட்டுமே வாழ வேண்டுமென்ற எண்ணத்துடனும் உள்ளனர். ஆனால், தன்னை இழந்து பிறரை மகிழ்விக்கவே கிறிஸ்து பிறப்பு அமைந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, மற்றவர்கள் மனம் மகிழ கடவுள் தன்னை முற்றிலும் தாழ்த்தி, குமாரனென்று பூமியில் பிறந்தார். அவரது பிறப்பு நம்மை மகிழ்விக்கவே ஆகும். துக்கம் மறைந்து மகிழ்ச்சி பிறக்கவும், அச்சம் மறைந்து அமைதி பிறக்கவும், பாவம் மறைந்து மீட்பு பிறக்கவும், நம்மோடு வாழவும் இயேசு கிறிஸ்து அவதரித்தார்.
உயிர்த்தெழுந்த தேவன்: வேதம் சொல்வதன்படி, தற்போதுள்ள உலகம், மனுக்குலத்தின் தலைமகன் ஆதாமிலிருந்து இயேசு பிறக்கும் வரை 4000 ஆண்டுகளும், இயேசு பிறப்பிலிருந்து இன்றுவரை 2000 ஆண்டுகளும் ஆக 6000 ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்துதான், உலக வரலாறு இன்றும் செல்கிறது. கிறிஸ்து முதல் ஆதாம் வரை கி.மு.,(கிறிஸ்துவுக்கு முன்)என்றும், கிறிஸ்து பிறப்புக்கு பின்(கி.பி.,) என்றும் கொள்ளப்பட்டுள்ளது. கிறிஸ்து வாழ்ந்த காலம் 34 ஆண்டுகள் மட்டும் என்றாலும், உலகத்தில் பெரும்பாலானவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தனி இடம் பிடித்துள்ளார். கிறிஸ்து பிறப்புக்கு 600 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் புத்தர் வாழ்ந்த அதே காலத்தில் இஸ்ரேல் நாட்டில் ஏசாயா என்னும் தீர்க்கதரிசியும் வாழ்ந்தார். அவர் கடவுளிடம் பெற்ற வார்த்தைகளை தீர்க்கதரிசனமாக எழுதி வைத்துள்ளார். இதோ கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதுபோல கன்னி மரியாள் வயிற்றில் இயேசு பிறந்தார். மனிதன் பிறப்பதும், வாழ்வதும், ஒரே தரம் இறப்பதுமே அவனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இயேசு பிறந்தும், வாழ்ந்தும், மரித்தும், உயிர்த்தும் இருக்கிறார். இது எப்படி சாத்தியம்? என்றால், ஏசாயா தீர்க்கதரிசி கூறுகையில், மரணத்தை ஜெயமாக விழுங்குவார் என்றார். தீர்க்கதரிசனப்படியே பிறந்த இயேசு தனது 34வது வயதில் இறந்தும், மூன்றாம் நாள் உயிர்த்தும் இருக்கிறார். உயிர்த்தெழுந்த பின் அவர் கூறுகையில், நான் மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், என்றும், உலகத்தின் முடிவுபரியந்தமும் சதா காலங்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.
மரியாளைப் பற்றி புனிதர்கள்: மனத்திலே மரியாளை நினையுங்கள், இதயத்திலே இயேசு வளர்வார் என வழிகாட்டினார் புனிதர் ஒருவர். மரியாள் வழியாக நாம் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்பது இறைவனின் திருவும் எனப்பகர்ந்தார் புனித பெர்னார்து. அவள் வழியாகவே அனைத்து அருளையும்மண்ணுலகம் அடைகிறது, என்றார் புனித அம்புரோசியார். அன்னை மேரி அருளின் வாயக்காலாக, அனைவருக்கும் அன்னையாக, துயர் துடைக்கும் ஆறுதலாக விளங்குகிறாள். மானிடர் விண்ணகம் ஏகிட இறைவன் தந்த தனிப்பெரும் ஏணியாக அமைந்துள்ளாள்.
இயேசுவைப் பெற்ற இதயதெய்வம்: கி.மு., 16ம் ஆண்டில், பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத்தில், யோவாக்கீம், அன்னாள் ஆகியோர் வசித்தனர். இந்த புண்ணியர்க்கு பிறந்தவளே மரியாள். மரியாள் என்றால் கடலின் விண்மீன் அல்லது பயணிகளுக்கு வழிகாட்டி. ஆம்...அவள் உலகத்தை மீட்க ஒரு தெய்வக்குழந்தையைத் தந்து, பாவங்களில் இருந்து மீள வழிகாட்டியவள். அவளுக்கு 15 வயது நடக்கும் போது, தாவீது அரச குலத்தில் பிறந்த, ஏழையான சூசைக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாள். அக்கால வழக்கப்படி ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மரியாளோ தன்னையும், தன் கன்னிமையையும் கடவுளுக்கே காணிக்கையாக்கி இருந்தாள். ஆயினும், நாட்டுச் சட்டப்படி முறைப்படி திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டியிருந்தது. அப்பொழுது ஒரு நாள் திடீரென ஒரு பேரொளி. அதன் பின்னும் காட்சி, கடவுளின் தூதர் அவளுக்குத் தோன்றி, அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்முடனே, என்றார். இவ்வாழ்த்தை மரியாளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வானதூதர் அவளைப் பார்த்து, மரியே, அஞ்சாதீர்.. இதோ உமது வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது என்றார். மரியாள் தூதரிடம், இது எப்படி சாத்தியம்? நானோ கணவனை அறியேனே என்றார். அதற்கு வானதூதர், பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும். இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும். அவளுக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை, என்றார். மரியாளோ, இதோ, ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும், என்றாள். அத்தருணமே கடவுள் மகன் இயேசு கன்னி மரியாளின் மகனானார். (லூக், 1:26-38) மரியாள் கடவுளின் தாயானாள். மனிதராகிய நாம் அனைவரும் இயேசுவில் இறைமக்களாகும் பேறு பெற்றோம். மரியாள் நம் தாயாகும் பேறும் பெற்றோம். மரியாளுக்குப் பேறுகாலம் நெருங்கிய பொழுது அந்நாட்டு அரசன், ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த ஊருக்குச் சென்று குடிக்கணக்கு (மக்கள் தொகை கணக்கு) கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டான். சூசை பெத்லகேமைச் சேர்ந்தவர். ஆதலால் அங்கு மரியாளுடன் சென்றாள். அங்கு வீடு கிடைக்காமல் மாடுகள் அடையும் குடிலில் அவர்கள் தங்கியிருந்தனர். அங்கே இயேசுவை மரியாள் பெற்றெடுத்தாள்.
இயேசுவின் வரலாறை எழுதியவர்கள்: இயேசுவின் வரலாற்றை நறுக்கென அவருடைய சீடர் நால்வர் எழுதியுள்ளனர். அந்நூலுக்கு நற்செய்தி என்று பெயர். மத்தேயு, மாற்கு, லூக்காசு, அருளப்பர் ஆகிய நால்வரும் நற்செய்தியைத் தனித்தனியே எழுதியுள்ளனர். நற்செய்தி நூல் பைபிளின் ஒரு சிறப்பான பகுதி தான். அது நம் ஒவ்வொருவருக்காகவும் எழுதப்பட்டது. இயேசு கிறிஸ்து தாம் யார் என்பதைப் படிப்படியாக, ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளார். அவர் தலைவர், ஆசிரியர், குரு, இறைவாக்கினார். இறைவனால் அனுப்பப்பட்டவர், மேசியா, இறைமகன், இறைவனே அதாவது கடவுளே அவர். நானே உலகின் ஒளி, என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான், உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான், (அரு.8:12). நானே வழியும் உண்மையும் உயிரும் என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை, (அரு.14:6) கடவுள் உங்கள் தந்தையாயிருப்பின் எனக்கு அன்பு செய்வீர்கள்; ஏனென்றால் நான் கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்துள்ளேன், (அரு 8:42) என்கிறார் இயேசு.