Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நிதீஸ்வரர்
  அம்மன்/தாயார்: கனகதிரிபுரசுந்தரி
  ஊர்: அன்னம்புத்தூர்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலங்களில் இதுவும் ஒன்று என்பதும், தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் தலம் என்பதும் தலத்தின் சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இத்தலத்தில் பிரம்மாவுக்கு திருவுருவச்சிலை காணப்படுவது வேறு எங்கும் காண முடியாத அரிய தரிசனமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம் அருகே அன்னம்புத்தூர்,604102 விழுப்புரம் மாவட்டம்  
   
போன்:
   
  +91 - 7010528137, 94440 36534, 89391 29293. 
    
 பொது தகவல்:
     
  ராஜராஜசோழ மன்னன், ஏராளமான கோயில்களைக் கட்டியுள்ளான்; எண்ணற்ற ஆலயங்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். புனரமைப்பு செய்து, மகிழ்ந்துள்ளான். சோழர்குல திலகம், சிவபாதசேகரன் என்றெல்லாம் போற்றப்பட்ட மாமன்னன் ராஜராஜசோழன், வியந்து வணங்கி வழிபட்டு சிலாகித்த கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்தும், நிவந்தங்கள் கொடுத்தும் இறைவனை வழிபட்டுள்ளான். அந்த ஊர் அன்னம்புத்தூர்; அங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் நிதீஸ்வரர். 1008ம் வருடம் தன்னுடைய 23வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ராஜராஜசோழன் திருப்பணிகள் செய்ததையும், புனரமைப்பு செய்ததையும், நிவந்தங்கள் அளித்ததையும் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன என்கின்றனர் இந்தியத் தொல்லியல் துறையினர். ராஜராஜப் பெருவுடையாரின் மெய்கீர்த்தியுடன் துவங்குகிற இந்தக் கல்வெட்டின்படி பார்த்தால், இதுவும் சுமார் 1000 ஆண்டுகளைக் கடந்த ஆலயம் என்பது தெளிவாகிறது. பல்லவர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். இங்கேயுள்ள விநாயகரின் விக்ரகம், பல்லவ காலச் சிற்பத்தை உணர்த்துவதாக உள்ளது என்கின்றனர் தொல்லியல் துறை ஆய்வாளர்கள்.

இக்கோயில்முற்றிலும் சிதிலமடைந்து மண்மேடாகிவிட்டது. தற்போது பக்தர்களின் முழு அர்ப்பணிப்பால் இங்கு நிதீஸ்வரப் பெருமானுக்கு, அம்பிகைக்கும், முழுவதும் கற்கோயிலாகப் பழமை மாறாமல் புராதனப் பெருமையுடன் திருப்பணிகள் நடைபெற்று 9.4.2014 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தலத்தில் உள்ள இறைவனை வணங்குவோர்க்கு பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கப்பெற்று அவர்களின் விதி புதியதாக மாற்றி எழுதப்படும் என்பதோடு அவர்களின் இல்லங்களில் வறுமை நீங்கி செல்வம், மகிழ்ச்சி தங்கும் என்பது உண்மை. பிரகார தளவரிசை, மகா மண்டபம் அமைத்தல், மடப்பள்ளி ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  விவசாயம் செழிக்கவும், பிரச்சனைகள் இன்றி நிம்மதியாக வாழவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும், திருமணத்தடை அகலவும், தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு, வீடு வாகன யோகம், கல்வியில் சிறந்து விளங்க மற்றும் பில்லி, சூனியம், ஏவல் அகலவும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக: வெள்ளிக்கிழமை, பூச நட்சத்திரம், பவுர்ணமி, அட்சய திரிதியை, தீபாவளி ஆகிய நாட்களில் குபேரன் வணங்கி நிதி பெற்ற ஈசனுக்கு ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். மன அமைதி, வீடு வாகன யோகம், திருமண பாக்கியம், சந்தான விருத்தி, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு பெறலாம். குழந்தைவரம்: குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதியர்கள் வெண்ணெய் கொண்டு வந்து அம்பாள் பாதத்தில் வைத்து தலத்தில் ஈசனையும், அம்பிகையையும் நினைத்து தியானம் செய்து கோயிலை 3 முறை வலம் வந்து வெண்ணெயை தம்பதியாக இருவரும் உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும். பொன், பொருள் விருத்தி அடைய கார்த்திகை திரிதியை (ரம்பா திரியை) அன்று அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது உகந்தது. குரு பரிகாரதலம்: குருபகவானுக்குரிய ப்ரத்யதி தேவதா பிரம்மா என்பதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள குருபகவானை குருபெயர்ச்சி அன்றும் மற்றும் குருபெயர்ச்சியை தொடர்ந்து வரும், ஆறு வியாழக்கிழமைகளிலும் பரிகார பூஜை செய்து திருமணத்தடை நீங்கி புத்திரப்பேறு பெறலாம், வியாபார விருத்தி அடையலாம். கல்யாண முருகர்: இத்திருத்தலத்தில் முருகன் கல்யாண சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இவருக்கு மாலை அணிவித்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காலபைரவர் வழிபாடு: மேற்கு நோக்கி ஈசனின் நேர்பார்வையில் வீற்றிருக்கும் காலபைரவைர 6 தேய்பிறை அஷ்டமி நாளிலும், ஞாயிறு அன்று இராகு காலத்திலும் 8 நெய் தீபம் ஏற்றி, சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்வதால் விரைவில் பிரிந்த குடும்பம் ஒன்று சேறும், தடைப்பட்ட அனைத்து காரியங்கள் நிறைவேறும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். 
    
 தலபெருமை:
     
  நம் தலையெழுத்தையே நிர்ணயித்து அருளும் பிரம்மனின் தலையெழுத்தை, கனிவும் கருணையும் பொங்க சிவனார் திருத்தி எழுதிய திருத்தலம் இது. ஆகவே, நிதீஸ்வரரை வணங்கி வழிபட்டால், சிவனாரும் அருள்வார். பிரம்மனும் நம் தலையெழுத்தைத் திருத்தி எழுதி அருள்வார். இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கப் பெறலாம். வேதனைகள் நீங்க பெறலாம். நிதிகளில் பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி என எட்டு வகை நிதிகள் உண்டு. இந்த எட்டு நிதிகளையும் தனது கடும் தவத்தால் ஈசனிடம் இருந்து பெற்றவர், நிதிகளுக்கெல்லாம் தலைவரானார். அவர் குபேரன். நிதிகளையெல்லாம் ஒருங்கே பெற்ற குபேரன் வழிபட்ட தலங்களுள், அன்னம்புத்தூர் திருத்தலமும் ஒன்று. எனவே, இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு திருநிதீஸ்வரர் எனத் திருநாமம் அமைந்ததாகத் தெரிவிக்கிறது கல்வெட்டு ஒன்று.

பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் நீங்க, ஜாதகத்தில் குரு பலம் பெற நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பெற பிரம்ம தேவன் வணங்கி பேறு பெற்ற நிதீஸ்வரப்பெருமானை ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் மஞ்சள் பூக்கள் (கொன்றை அல்லது மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, 5 நெய் தீபம் ஏற்றி, 5 முறை கோயிலை வரம் வர அவர்களின் தலை எழுத்தை மங்களகரமாக மாற்றி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கிடும் என்பது ஐதீகம்.

லக்ஷ்மி கணபதி:
முழுமுதற்கடவுளான கணபதி இத்தலத்தில் லக்ஷ்மிகணபதியாக அருள்பாலிக்கின்றார். சதுர்த்தி திருநாளில் இவரை வழிபட்டால் கல்வியில் உயர்வும், கும்படுத்தில் லக்ஷ்மி கடாஷமும் பெருகும்.

தன ஆகர்ஷன பைரவர் வழிபாடு: வளர்பிறை அஷ்டமி அன்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இரவு 7.30 மணி முதல் 8.00 மணி வரை தன ஆகர்ஷன பைரவரை 8 நெய் தீபம் ஏற்றி சிகப்பு அரளியால் அர்ச்சனை செய்து வழிப்பட்டால் அனைத்து வகையான செல்வங்களும் கிடைக்கப்பெறும்.
 
     
  தல வரலாறு:
     
  மாமன்னன் இராஜராஜ சோழன் வியந்து, வணங்கி, திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் கொடுத்து இங்குள்ள நிதீஸ்வரரை வழிபட்டுள்ளான். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாய்ந்த இக்கோயில்.

பிரம்மன் வழிபட்ட தலம்: அன்னமூர்த்தி, அன்னவாகனன் என்று அழைக்கப்படும் படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும், காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு கயிலைநாதனிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க சிவபெருமான் அடியை முடியை யார் கண்டு வருகிறார்களோ அவர்தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண புறப்பட்டுத் தேடி தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்து சென்று முடியைக் கண்டதாக பொய்யுரை கூறி நின்றார். பொய் உரைத்ததால் பிரம்மனை சிவபெருமான் அன்னமாகும்படி சபித்தார். தனக்கு ஏற்பட்ட இழுக்கு தீர பிரம்மதேவன் இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி படைப்புத் தொழிலை மேற்கொண்டார். இதனால் இத்தலத்திற்கு அன்னம்புத்தூர் என்ற திருநாமம் ஏற்பட்டு உள்ளது. இத்தலத்தில் நான்முகன் வழிபட்டதற்கு ஆதாரமாக புராதனமான செல்லியம்மன் திருக்கோயிலில் பிரம்மாவுக்கு திருவுருவச்சிலை காணப்படுவது வேறு எங்கும் காண முடியாத அரிய தரிசனமாகும்.

பதுமநிதி, மகாபதுமநிதி, மகா நிதி, கச்சபநிதி, முகுந்தநிதி, குந்த நிதி, நீல நிதி, மற்றும் சங்க நிதி போன்ற எட்டு வகையான நிதிச்செல்வங்களுக்குத் தலைவன் குபேரன். இச்செல்வங்களுக்குத் தலைவனாக விளங்குவதால் நிதிபதி என்று போற்றி வணங்கப்படுபவன். தனக்கு எப்போதும் அள்ள அள்ளக் குறையாø செல்வங்களை வழங்கவேண்டும் என இத்தலத்தின் ஈசனை, குபேரன் வழிபட்டு நீங்காத செல்வம் நிலைக்கப்பெறும் பேறினைப் பெற்றதால் இறைவனுக்கு நிதீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது.

குபேரன் வழிபட்ட தலம்: எட்டு வகையான நிதிச்செல்வங்களுக்குத் தலைவன் குபேரன். இச்செல்வங்களுக்குத் தலைவனாக விளங்குவதால் நிதிபதி என்று போற்றி வணங்கப்படுபவன். தனக்கு எப்போதும் அள்ள அள்ளக் குறையாத செல்வங்களை வழங்கவேண்டும் என இத்தலத்தின் ஈசனை, குபேரன் வழிபட்டு நீங்காத செல்வம் நிலைக்கப்பெறும் பேறினைப் பெற்றதால் இறைவனுக்கு நிதீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலங்களில் இதுவும் ஒன்று என்பதும், தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் தலம் என்பதும் தலத்தின் சிறப்பு.
விஞ்ஞானம் அடிப்படையில்: இத்தலத்தில் பிரம்மாவுக்கு திருவுருவச்சிலை காணப்படுவது வேறு எங்கும் காண முடியாத அரிய தரிசனமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar