Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)
  அம்மன்/தாயார்: மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)
  தல விருட்சம்: மூங்கில் மரம்
  தீர்த்தம்: தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
  புராண பெயர்: திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர்
  ஊர்: திருவெண்ணெய்நல்லூர்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  சுந்தரர்- முதல்பாடல்
தேவாரப்பதிகம்

பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள் அத்தாஉனக்கு ஆளாய்இனி அல்லேன் எனலாமே.

-சுந்தரர்.
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.
 
     
 திருவிழா:
     
  ஆடி சுவாதி சுந்தரருக்கு 2 நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பங்குனி உத்திரம் கொடி தேரோட்டம் 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம், ஆவணி மூலம் புட்டு உற்சவம், கந்த சஷ்டி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 225 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில், திருவெண்ணெய்நல்லூர்-607 203. விழுப்புரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-93456 60711 
    
 பொது தகவல்:
     
 

இத்திருக்கோயில் திருவருட்டுறை என்ற பெயருடையது. கருவறையில் அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற மேனியாக காட்சி தருகிறாள். சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.  இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பொல்லாப்பிள்ளையார்.


 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.

பொல்லாப்பிள்ளையார் : இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஊமையாய் இருப்பவர்கள் வழிபட்டால் பேச்சு வரும் அம்பிகை சன்னதியில் நால்வகை எண்ணெய் நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணெய் ஆகியவற்றை கலக்கி ஏற்றினால் திருமண வரம், குழந்தை வரம், உத்தியோக வரம், தொழில் விருத்தி ஆகியவை கைகூடும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  தர்மதேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தாங்களும் மாலை போட்டு நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் ,தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். பூர்வ ஜென்ம பாவம் விலக யாகம் செய்கிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது மேலும் ஒரு விசேசம். இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து பால் அபிசேகம் செய்து ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.நெய்தீபம் ஏற்றலாம்.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  திருமண நாளன்று திருநாவலூரில் திருமணக்கோலத்திலிருந்த சுந்தரரை வயதான வேடம் கொண்டு ஈசன் தடுத்தாட் கொண்டார். நீ எனக்கு அடிமை என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட அதிலுள்ள கையெழுத்து உண்மையானதுதான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள்.

கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை பித்தன் கிறுக்கன் என்றெல்லாம் திட்டினார்.அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன்தான் என்பதை அறிந்த சுந்தரர் ஈசனை வணங்கி நிற்க, என்னப் பற்றி பாடு என்று ஈசுவரன் கேட்க எப்படிப் பாடுவது என்று சுந்தரர் கேட்க என்னை பித்தா என்று திட்டினாயே அதையே பாடு என்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போதுதான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து ஈசன் எழுந்தருளியிருக்கும் தலம் தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார்.

கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் வடக்கு பக்கத்தில் சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.பரமன் நின்று சாய்ந்திருந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது. மேலும் பரமன் அடி வைத்த இம்மன்றத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு

அர்ச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது.தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் இங்கு உள்ளது.மகாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்கு உள்ளது. இங்குள்ள சண்முகநாதர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். முருகன் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம். மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும்.

சங்க நிதி, பதுமநிதி , ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இங்கு இருப்பது சிறப்பு. பாண்டவரில் அர்ச்சுணன் தன்மூத்தோனாகிய தருமனும் பாஞ்சாலியும் தனித்திருந்த பாவத்தை இங்குள்ள இறைவனை வழிபட்டப் போக்கிக் கொண்டான். மேலும் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான். கருவுற்றப் பசுவை வேள்வி செய்த பாவத்தை வித கோத்திரர் என்னும் அந்தணர் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி பாடிப்பணிந்து போக்கிக் கொண்டார். சடையப்ப வள்ளல் இவ்வூரில் வாழ்ந்திருக்கிறார் என்ற சிறப்பும் முக்கியமானது.
 
     
  தல வரலாறு:
     
  தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி சிவபெருமானைக் கொல்ல ஏவினர்.அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார்.
முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள்.இறைவன் அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருட்டுறை (அருள் துறை) எனப்பெயர் பெற்றது.முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர் எனப்பெயர் பெற்றார்.

மறைகள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில் இறைவன் தீயுருவாகத் தோன்றினான் அவை கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினான்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar