Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்து குமார சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முத்து குமார சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்து குமார சுவாமி
  உற்சவர்: முத்துகுமாரசுவாமி, மதிமாலீஸ்வரர், மரகதாம்பிகை
  அம்மன்/தாயார்: மரகதாம்பிகை
  தல விருட்சம்: ஆலமரம்
  தீர்த்தம்: சரவண தீர்த்தம்
  புராண பெயர்: மாதா ஊர்
  ஊர்: மாதப்பூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூச தேர்த்திருவிழா ஒருநாள் விழாவாகும். பங்குனி உத்திரம் 3 நாள் விழாவாகும். இவ்விரு விழாக்கள் இத்தலத்தின் பெருவிழாக்கள் ஆகும். பவுர்ணமி நாளன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறும் கிரிவல நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்வது சிறப்பாகும்.  
     
 தல சிறப்பு:
     
  பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பம்சமாகவும். அதுமட்டுமின்றி முருகன் தாய், தந்தையருடன் அமர்ந்துள்ள இடம் என்பதால் இது மிகவும் சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்துக்குமார சுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.641664  
   
போன்:
   
  +91 95240 74447 
    
 பொது தகவல்:
     
  மைசூர் மகா ராஜாக்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. கோயில் பூஜைகள் தொடர்ந்து நடைபெறவும், வாத்தியம், ஆடல்மகளிர் என அனைத்து பணிகளுக்கும்  தனித்தனியே நிலங்கள் வழங்கி நித்திய பூஜைகள், விழாக்கள் போன்றவை தங்குதடையின்றி நடைபெற அன்றைய அரசர்கள் உதவி புரிந்துள்ளனர். கோயில் பெயரில் தனியே நிலமும், ஊழியம் செய்பவர்களுக்கு என தனியே மானிய நிலங்களும் அரசர்களால் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதற்குண்டான ஆவணங்கள் அனைத்தும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பழநி கோயில் உருவான சமகாலத்தில் இக்கோயிலும் உருவானதாக அறியப்படுகிறது. பழநி முருகனுக்கும் மாதப்பூர் முருகனுக்கும் உருவ ஒற்றுமை உள்ளது. பழநி முருகன் மேற்கு நோக்கியும் இம்முருகன் கிழக்கு நோக்கியும் இருப்பது மட்டுமே வேறுபாடு. இத்தலத்தில் உள்ள சுனை, பாத விநாயகர், படிகள் மற்றும் கற்கோவில் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் சமகால வரலாற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது.

மதிமாலீஸ்வரர், மரகதாம்பிகை, முத்துகுமாரசுவாமி என மூவருக்கும் தனிச் சன்னிதிகள் வரிசையாக உள்ளன. தனித்தனியே விமானங்களும் அழகிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரு பெரிய பாறை மீது அமைந்துள்ளன. கருவறைக்கு முன் அர்த்த மண்டபம், முன் மண்டபம் என அழகிய கற்சிற்பங்களுடன் கூடிய மண்டபங்களனைத் தன்னகத்தே கொண்டது. மீன் சின்னங்கள் காணப்படுவதால் பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்த கோயில் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்திருந்தாலும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது பிரிதொரு சிறப்பு. கோயிலைச்சுற்றி வெளி பிரகாரத்தில் சூரியன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, சனீஸ்வரர், காலபைரவர், நவகிரஹம் மற்றும் சந்திரன் ஆகிய தெய்வங்கள் தனிச் சன்னிதியில் அருள் பாலிக்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  சஷ்டி விரதம் இருந்து துதித்து வந்தால் திருமண தடைகள், பிள்ளைப்பேறு ஆகிய வேண்டுதல்கள் நிறைவேறுவதாலும், அன்னை மரகதாம்பிகை தாயுள்ளத்தோடு அருள்வதால், வேண்டுவன எல்லாம் நிறைவேறுகின்றன என  ஏராளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு சந்தனகாப்பு , பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம் , அன்னதானம் வழங்குவது , நெய் விளக்கு ஏற்றுதல், அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. 
    
 தலபெருமை:
     
  இக்குன்றின் தென்புறம் ஒரு சுனை உள்ளது. அம்பாள் தனக்காக கங்கையை உருவாக்கிக் கொண்டதாகவும், மகன் தாய்க்காக சுனையை உருவாக்கியதாகவும் அறியபப்டுகிறது. வருட முழுவதும் பாறை இடுக்குகளில் இருந்து வரும் நீர் தரைமட்டத்திற்கு பொங்கி வந்து வழிந்து ஓடுவதும், என்றும் வற்றாமல் இருப்பதும் பேரதிசயமாகும். கடுமையான வறட்சி காலத்திலும் வற்றியது இல்லை. கோயிலின் தென்பகுதியில் மதிமாலீஸ்வரர் சன்னிதியும், அடுத்து மரகதாம்பிகை சன்னிதியும் உள்ளன. அடுத்துள்ள தனிச்சன்னிதியில் முருகன் முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்தில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். முருகன் என்றாலே அழகன்தான். ஆனால் இவரோ பேரழகன். கண்டு துதிக்க கண் கோடி வேண்டும். முருகன் அழகை கண்டு தொழ நாலாயிரம் கண்படைத்திலனே அந்த நான்முகன் என அருணகிரிநாதர் பாடிய வரிகள் தான் நினைவுக்கு வரும். மலைக்கோயில் 40 படிக்கட்டுகளைக் கொண்டது. படி தொடக்கத்தில் பாதவிநாயகர் சன்னிதி உள்ளது. கொங்கு நாட்டு மரபுபடி தீபஸ்தம்பம் கோயிலுக்கு வெளியே வாசலில் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தின்போது மகா தீபம் இங்குதான் ஏற்றப்படும்.  
     
  தல வரலாறு:
     
  குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். ஆனால் தாய் தந்தையுடன் அருள்பாலிக்கும் ஓர் அற்புத தலமாக விளங்குகின்றது மாதப்பூர் முத்து குமார சுவாமி கோயில். ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பழமையான கற்கோயில். இத்தலம் அமைந்துள்ள இடம் பல்லடம்-காங்கேயம் நெடுஞ்சாலையில் உள்ள (என்ஹச்-67) மாதப்பூர் எனும் கிராமம். மாதப்பூர் எனும் பெயருக்கு இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஞான பழத்துக்காக கோபித்துக்கொண்ட முருகன் பழநிமலையில் அமர்ந்தார். அவரைத் தேடிவந்த சிவனும் பார்வதியும் இக்குன்றின் மீது ஏறி நின்று மகனே நீ எங்கே இருக்கின்றாய்? என குரல் எழுப்பிய போது பழநியில் அமர்ந்திருந்த முருகன் தாய், தந்தையருக்காக இங்கு காட்சியளித்ததாக ஸ்தல வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. மாதாவுக்கு மகன் மகன் காட்சியளித்ததால் மாதா ஊர் என வழங்கப்பட்டு பின் மருவி மாதப்பூர் என ஆனது. மாதாவின் அன்பைப் பெற்றதால் முருகனே மாதாவின் பெயரில் மாதா ஊர் என அழைத்ததாகவும் செவி வழிச் செய்தி உள்ளது. திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலம். ஒருமுறை பாலக்காட்டில் இருந்து மைசூருக்கு படை, பரிவாரங்களுடன் சென்றான். அப்போது பின்னால் வந்த படைவீரர்களை காணவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேடினான். பின் உயரமான இக்குன்றின் மீது ஏறி தேடியுள்ளான். அச் சமயத்தில் சுயம்புவான முருகன் மீது ஏறி நின்று பார்த்துள்ளான். இதனால் கோபம் அடைந்த முருகன் திப்பு சுல்தான் கண் பார்வையை பறித்து விட்டார். மிகவும் துயரமும் வேதனையும் அடைந்தான். கண்பார்வை பறிபோனது தெய்வ குற்றம் என்பதை உணர்ந்து மனம் வருந்தினான். தன் தவறை உணர்ந்தான். இறைவனிடம் மன்றாடி, தன்னை மன்னித்து அருளுமாறு வேண்டினான், முருகனும் மனமிறங்கி அவனை மன்னித்து அருளி மீண்டும் கண்பார்வையை அளித்தார். மனமகிழ்ந்த திப்புசுல்தான் முருகனுக்கு ஒரு கோயில் எழுப்புவதாக வாக்களித்து அவ்வாறே தாய் தந்தையருக்கும் சேர்த்து கோயில்களை கட்டிக் கொடுத்தார்.

 படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பம்சமாகவும். அதுமட்டுமின்றி முருகன் தாய், தந்தையருடன் அமர்ந்துள்ள இடம் என்பதால் இது மிகவும் சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar