Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சித்தி விநாயகர்
  அம்மன்/தாயார்: ரித்தி, சித்தி
  ஊர்: பிரபாதேவி
  மாவட்டம்: மும்பை
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  சங்கடஹர சதுர்த்தி பூஜை, தவிர பஞ்சாமிர்த பூஜை, ஸ்ரீசத்யநாராயண பூஜை, லகு ருத்ர பூஜை முதலான இன்னும் பல பூஜைகளும் நடைபெறுகின்றன. தினமும் இரவு ஏழரை மணிக்கு நடைபெறும் ஆரத்தி கண்கொள்ளாக் காட்சியாகும். வருடத்துக்கு இரு முறை மட்டுமே செவ்வாய்க் கிழமையன்று சங்கடஹரசதுர்த்தி எனப்படும் அங்காரக சதுர்த்தி வருகிறது. இப்படிப்பட்டநாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சித்தி விநாயகரை தரிசிக்கிறார்கள்.  
     
 தல சிறப்பு:
     
  சித்தி விநாயகரின் விக்ரகத்தில் தும்பிக்கை வலதுபுறமாக வளைந்திருப்பது தனிச் சிறப்பு வாய்ந்தது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். (செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் தரிசனம், நள்ளிரவுவரை நீடிக்கிறது.) 
   
முகவரி:
   
  அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், எஸ்.கே.போலேமார்க், பிரபாதேவி, மும்பை- 400028.  
   
போன்:
   
  +91 22 2437 3626 
    
 பொது தகவல்:
     
  ஏனெனில் பொதுவாக விநாயகர் விக்ரகங்களில் தும்பிக்கை இடது புறமாகவே வளைந்திருப்பதை நாம் பார்க்கலாம். இந்த விக்ரகம் உள்ள கோயிலின் கர்ப்ப கிரகம் அவ்வப்போது மாற்றப்பட்டுக் கொண்டே வரப்பட்டுள்ளது. இறுதியாக இப்போது இந்த அபாரமான அமைப்பாக எழுந்தருளியுள்ளது. இதற்கான பூசை புனஸ்காரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணம் இருக்கும். பூஜை புனஸ்காரங்கள் பொதுவாக 15 நாட்கள் வரை நீடிக்கும். 1801 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வியாழக்கிழமை இந்த பழைய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புனிதத் தலமாக்கப்படுகிறது. நம் இந்து நாட்காட்டியின் படி இது கார்திகை ஷுத சதுர்தசியாகும். இந்த கோயில் அப்போது 3.60க்கு 3.60 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தது.

இது தரைத்தளத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது. 450 மி.மீ. அடர்த்தியுள்ள செங்கல் சுவர்கள் மற்றும் செங்கல்லில் ஒரு கோபுரம் அதன்மேல் ஒரு கலசம் என்று அமையப்பெற்றிருந்தது. கோயிலின் தரைமட்டமும் சாலையின் தரைமட்டமும் ஒரே அளவில் இருந்தது. இந்த கோயில் பிரபாதேவியில் காகா சாஹேப் மற்றும் எஸ்.கே. போல் மார்க்கத்தின் மூலையில் உள்ளது. இந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் புத்தி என்று கூறுவதை, இங்கு ரித்தி என்கிறார்கள். வெற்றி, செல்வம் மற்றும் நல்வாழ்வை அருளும் பெண் தெய்வங்களாக இவர்கள் வழிபடப்படுகின்றனர். தேங்காய் மற்றும் இனிப்பு பொட்டலங்களை விநாயகருக்கு சமர்ப்பித்து பக்தர்கள் வழிபடுகின்றனர். விநாயகர் கருவறையைப் பல முறை மாற்றி மாற்றிக் கட்டியபோதிலும் மூல விக்கிரகத்தை நகர்த்தாமல் கட்டட வேலைகளைச் செய்து முடித்தார்களாம். இந்தக் கோயிலுக்கு 1994-ஆம் ஆண்டு சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. கருவறைக்கு மூன்று நுழைவாயில்கள் உண்டு. அவற்றின் கதவுகளில் அஷ்ட கணபதி, அஷ்டலட்சுமி, தசாவதாரக் காட்சிகள் போன்றவை காணப்படுகின்றன. விநாயகரின் அருகில் இருந்து பிரார்த்தனை செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இங்குள்ள விநாயகருக்கும் மூஞ்சூறுக்கும் அறுகம்புல் மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். அருகில் உள்ள பளிங்கு மேடை ஒன்றின் மீது, சுமார் ஒன்றரை அடி உயர வெள்ளிக் கவசம்சார்த்தப்பட்டுக் காட்சியளிக்கிறது மூஞ்சூறு. இதன் வாயில் இனிப்புப் பண் டத்தை வைத்து, வலக் காதில் தங்களது வேண்டுதலை கூறிச் செல்கிறார்கள். இங்குள்ள உயரமான கல்தூண் ஒன்றில் கல் அகல்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது மண் அகல்களில் தீபமேற்றி வைத்து வழிபடுகிறார்கள். இங்கு கண்ணாடிப் பெட்டி ஒன்றுக்குள் சந்தனமரத்தில் வடிவமைக்கப்பட்ட தேர் இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் பழைய கலசம்ஒன்றையும் கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அருகில் கண்ணாடி ஃபிரேம் போட்ட விநாயகர் யந்திரம் ஒன்றும் உள்ளது.  கோயிலுக்குள் வைத்திருக்கும் குளோஸ்டு சர்க்யூட்மானிடர் மூலம் கருவறை விநாயகரையும் வழிபாடுகளையும் வெளியிலிருந்தே தரிசிக்கலாம். நவசச்சா கணபதி அல்லது நவசால பவனார கணபதி என்று மராத்தியில் பரவலாக அறியப்படுகிறார் இந்த சக்தி வாய்ந்த சித்தி விநாயகர். நவசால பவனார கணபதி என்றால் எளிமையாகவும் உண்மையாகவும் வேண்டிக் கொண்டால் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் கணபதி என்று பொருள்.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  விநாயகருக்கு சனிக்கிழமைதோறும் பக்தர்கள் இங்கு வந்து, இவருக்கு எண்ணெய் வழிபாட்டுடன் எருக்கம் இலை மாலையை அணிவித்தும் பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  தூரத்தில் இருந்தே இந்தக் கோயில் கோபுரங்களை தரிசிக்கலாம். ஐந்து அடுக்குக் கட்டடமாக உள்ள இந்தக் கோயிலின் கருவறை விமானத்தின் மேல் தங்கமுலாம் பூசப்பட்ட பெரியகலசம் ஒன்று (சுமார் 12 அடி உயரம்) காணப்படுகிறது. மற்ற கோபுரங் களின்மேல் சிறிய சிறிய கலசங்கள். கருவறையில் விதவிதமான ஆபரணங்கள் அணிந்து, வேலைப்பாடு மிகுந்த ஒரு வெள்ளி மேடையில் அமர்ந்து அழகே உருவாகக் காட்சி தருகிறார் சித்திவிநாயகர். தங்கமுலாம் பூசப்பெற்ற இந்த மேடையின் விதானம், ஒரு தாமரைப்பூவைக் கவிழ்த்து வைத்தாற்போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகரை மராத்தியில் நவசாக கணபதி என்றும், நவச பவனார கணபதி என்றும் அழைக்கின்றனர்.

இங்குள்ள விநாயகரின் விக்கிரகம் ஒற்றைக் கருங்கல்லால் ஆனது. உயரம் சுமார் இரண்டரைஅடி. அகலம் இரண்டடி. நவீனபாணியிலான மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் நைவேத்தியம், ஒரு பிரத்தியேக லிப்ஃட்மூலம் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அர்ச்சகரால் விநாயகருக்குப் படைக்கப்படுகிறது. இங்கு ஆஞ்சநேயருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. காவி நிறத்தில் காணப்படும் அழகியமண்டபத்தில், கல்லாலான புடைப்புச் சிற்பத்தில் வாலை உயர்த்தியபடி தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர். 1952-ஆம் ஆண்டுவாக்கில் அருகே உள்ள சயானி சாலையை விரிவுபடுத்தியபோது பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாம் இந்த ஆஞ்சநேயர் விக்கிரகம். அப்போதுசித்தி விநாயகர் கோயிலில் தலைமை அர்ச்சகராக இருந்த ஸ்ரீகோவிந்த் பதக் என்பவர்மூலம் இது, சித்தி விநாயகர் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
 
     
  தல வரலாறு:
     
  சிவபெருமானின் மகன் விநாயகர் பலர் வழிபடும் ஒரு கடவுள். பக்தி சிரத்தையுடன் எழுப்பப்பட்டு எண்ணற்ற பக்தர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் வணங்கும் ஒரு தெய்வம் விநாயகர். மும்பைவாசிகள் விநாயகர் மேல் அபார பக்தி கொண்டவர்கள். இதை மெய்ப்பிக்கும் விதமாக இங்கு ஏராளமான விநாயகர் கோயில்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சித்திவிநாயகர் கோயில். இது, மும்பையின் பிரமாதேவி பகுதியில் எஸ்.கே.போலேமார்க் எனும் இடத்தில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்தக் கோயில் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு நிதி உதவி செய்தவர் டியூபாய் பட்டீல் என்ற பெண்மணி. மும்பையின் மாதுங்கா பகுதியில் வசித்த இவர், தனக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்தால் விநாயகருக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். ஆனால், எதிர்பாராமல் அவரின் கணவர் காலமாகி விட்டதால், அவரது வேண்டுதல் பலிக்கவில்லை.

இந்த நிலையிலும் டியூபாய் பட்டீலுக்கு விநாயகர் கோயில் கட்டும் எண்ணம் மீண்டும் துளிர்விட்டது. நாட்காட்டியில் உள்ள விநாயகர் திருவுருவம் போல் கோயில் விக்ரகம் அமையுமாறு ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஆனால் அந்த நாட்காட்டியில் இருந்த விநாயகர் பாங்கங்கா வாக்லேஷ்வரில் உள்ள விக்ரகத்தை ஒத்திருந்தது. இது 500 ஆண்டுகால புராதனத் தன்மையுடையது. இந்த கோயிலை கட்டும் நோக்கம் தியூபாய் பாட்டிலுக்கு ஒரு நாள் விநாயகர் வழிபாட்டின் போது உதயமானது. இந்த முறை அவர் தனக்காக அல்லாது, கணேசாய உன்னை தரிசித்துச் செல்லும் குழந்தை இல்லாத பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும்! என்று பிரார்த்தித்ததுடன், கோயில் திருப்பணிகளையும் தொடங்கினார். பாட்டிலின் நிதியுதவி மற்றும் உத்தரவுகளின் பேரில் காலஞ்சென்ற கட்டிட காண்ட்ராக்டர் திரு. லக்ஷ்மண் விது பாட்டில் கட்டினார். இன்றும் குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறார் இந்த சித்தி விநாயகர்.

சித்தி விநாயகர் விக்ரகம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இது சுமார் 750 மி.மீ. அல்லது 2 அடி 6 அங்குலம் உயரமும், 2 அடி (600 மி.மீ.) அகலமும் உடையது. இந்த விநாயகர் விக்ரகத்தின் தனிச் சிறப்பு என்னவெனில் வழக்கமாக எல்லா விநாயகர் விக்ரகத்திலும் தும்பிக்கை இடது புறமாக வளைந்திருக்கும், இதில் வலது புறமாக வளைந்திருக்கும் என்பதே. இது வழக்கத்துக்கு மாறான ஒரு விநாயகர் விக்ரகம் என்றால் மிகையாகாது. மேல் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் இந்த விநாயகர் விக்ரஹம் தாங்கி நிற்கிறது. கீழ் வலது கையில் ஜப மாலையும், இடது கையில் ஒரு கிண்ணம் முழுதும் மோதகமும் உள்ளது. வலது தோளிலிருந்து இடது வயிறு வரை பூனூலை ஒத்த ஒரு பாம்பு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட விசித்திரகமாக இந்த விநாயகருக்கு நெற்றிக்கண் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சித்தி விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர். இருபுறமும் ரித்தி மற்றும் சித்தி என்ற இரண்டு பெண் தெய்வங்களின் விக்ரஹங்கள் காணப்படும். விநாயகர் விக்ரகத்திலிருந்து பின்புறமாக முளைத்து வருவது போன்ற தோற்றத்தில் ரித்தி மற்றும் சித்தி விக்ரகங்கள் இருக்கும். இந்த இரண்டு பெண் தெய்வங்களுடன் விநாயகர் காட்சியளிப்பதால் இந்தக் கோயில் சித்தி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்தி விநாயகரின் விக்ரகத்தில் தும்பிக்கை வலதுபுறமாக வளைந்திருப்பது தனிச் சிறப்பு வாய்ந்தது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar