Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கொளஞ்சியப்பர்
  தல விருட்சம்: கொளஞ்சிமரம்
  தீர்த்தம்: மணிமுத்தாறு
  ஊர்: மணவாளநல்லூர், விருத்தாசலம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனிஉத்திரம் -10 நாட்கள் திருவிழா சித்ராபவுர்ணமி நாளில் 1008 பால்குடம் எடுப்பார்கள் வைகாசித்திங்கள் - வசந்த உற்சவம் - 10 நாட்கள் திருவிழா- லட்சார்ச்சனை - சட்டத்தேரில் முருகன் விநாயகருடன் வீதி உலா மாதந்தோறும் கார்த்திகை நாளன்று சிறப்பான அபிசேக ஆராதனைகள் நிகழ்ந்து வருகின்றன. சந்தனத்தால் செய்து வைக்கப்பெற்றுள்ள முருகன் திருவுருவத்தைப் பீடத்தின் மேல் நிறுவி, கிரீடம் அணிவித்து உருவத்திருமேனியில் கொளஞ்சியப்பரை அலங்கரித்து வழிபடுகின்றனர். ஆடிக்கிருத்திகை சிறப்பாக நடைபெறும். அன்றும் ஏராளமான காவடிகள் வரும்.ஐப்பசித் திங்கள் கந்தர்சஷ்டி ஆறு நாட்களும் கொளஞ்சியப்பர் ஆறுவகையில் அலங்கரிக்கப்படுகிறார்.லட்சார்ச்சனை நடைபெறும். ஏராளமான திருமணங்களும் இங்கே நடைபெறுகின்றன. தை வெள்ளி, ஆடிவெள்ளிகளில் மாவிளக்கு இட்டு வழிபடும் பழக்கம் உள்ளது.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்-606001, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4143-230 232, 93621 51949 
    
 பொது தகவல்:
     
 

கொளஞ்சியப்பரின் வலப்பாகத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்மிகு சித்தி விநாயகர் பெரிய திருமேனி கொண்டு காட்சி தருகிறார். இருவருக்கும் தனித்தனி விமானங்கள். கொளஞ்சியப்பர் விநாயகர் சன்னதிகளுக்கு எதிரில் வேட்டைக்கு தயாரான நிலையில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பெரிய குதிரைகள் நிற்கின்றன. குதிரைச் சிலைகள் கண்ணையும் கருத்தையும் கவரும் கம்பீரத் தோற்றம் உடையவை. கோயிலின் பின்பக்கமாக இடும்பன், கடம்பன் ஆகியோருக்கு தனிக்கோயில் இருக்கின்றன. சுவாமி சந்நிதிக்கு எதிரில் மகா மண்டபத்தை ஒட்டி சற்றே இடப்பக்கத்தில் முனியப்பர் சந்நிதி உள்ளது. முனியப்பருக்கு எதிரில் கல்லிலும், இரும்பிலும் வடிக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான சூலங்கள் மேல் நோக்கி நெருக்கமாக நாட்டப்பெற்றுள்ளன. இவற்றை அடுத்துச் சற்றே கிழக்கில் வீரனார் காட்சி தருகிறார்.


 
     
 
பிரார்த்தனை
    
 

பிராது கட்டுதல் : தம் குறை முடிக்க வேண்டி, பிராது கட்டுதல் என்ற நேர்த்தி கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது.பொருள் களவு போய்விட்டலோ கொடுத்த கடன் திரும்பாவிட்டாலோ, பிறர் தம்மை வஞ்சித்து விட்டலோ, கடும் நோயால் அவதி உற்றாலோ , குடும்பப் பிரச்சினைகளால் வாடினாலோ, மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் தடைபட்டாலோ, வேலை கிடைக்காது, வறுமை உற்றாலோ, வேறு யாதொன்று வேண்டி நின்றாலோ, யாவற்றையும் இங்கே பிராது கட்டி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


எவ்வாறு பிராது கட்டுதல்?: பிராது வாசகத்தை ஒரு வெள்ளைத் தாளில் கீழ்க்கண்டவாறு எழுதவேண்டும். மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு..... என ஆரம்பித்து தான் எந்த ஊரிலிருந்து வருகிறேன் என்றும்,தன்னுடைய கோரிக்கை இன்ன என்றும் தெளிவாக எழுதி கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்தால் அவர் அதை கொளஞ்சியப்பர் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு விபூதி பொட்டலம் ஆக்கி தருவார். அதை சிறுநூலால் கட்டி முனியப்பர் சந்நிதியில் இருக்கும் வேலில் கட்டித் தொங்க விட்டுவிட்டு விடைபெறலாம். இப்படி வேண்டிக்கொண்ட 90 நாட்களில் பிராது கட்டியவரின் எண்ணம் ஈடேறும். எந்த ஊரிலிருந்து வருகிறோமோ அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 10 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.


ராஜினாமா கட்டணம்: கோரிக்கை நிறைவேறினால் இந்த தேதியில் நான் வந்து வைத்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திகடனை செலுத்தலாம். குழந்தை வரம், கடன் தொல்லை,திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம்,பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆடு மாடு கோழி தானம், எடைக்கு எடை நாணயம் வழங்கல், முடி எடுத்தல், பால்குடம் எடுத்தல்,ஆகியவை இங்கு விசேசம். பங்குனி உத்திரத்திற்கு காவடி எடுத்தல் இங்கு விசேசம். உடலெங்கும் அலகு குத்தி வருதல் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. உண்டியலில் பொன்தாலி, குண்டு, வெள்ளியில் பரு முதலியன நீங்கப்பெற்றவர்கள் அதன் வடிவில் செய்து வழங்கும் பரு உருண்டை, கண்ணடக்கம், மனிதர் கை, கால், வயிறு, மார்பு வடிவில் செய்யப்பெற்ற வெள்ளி உடல் உறுப்புகள், தொட்டிலில் கிடக்கும் குழந்தை வடிவங்கள் யாவும் நேர்த்திகடன்களாக செலுத்தப்படுகின்றன.கருவறை பின்பக்கம் வேப்பமரம் மற்றும் அரச மரங்களில் குழந்தை உறங்குவது போல் ஒரு கல் வைத்துச் சிறு ஏணைகள் கட்டித் தொங்க விட்டுப் பிள்ளை வரம் வேண்டுதலும் உண்டு. தொட்டில் கட்டுதல், பூஜைமணி வாங்கி வைத்தல், விளக்குகள் வாங்கி வழங்குதல் ஆகிவற்றையும் பக்தர்கள் செய்கின்றனர்.நெல் , கம்பு, கேழ்வரகு ,சோளம், மணிலா,உளுந்து, பயிறு கொள்ளு, நவதானியங்கள்,மஞ்சள்ல முந்திரி, கனிவகைகள், பலா, வாழை, மா அனைத்து வகைக் காய்கறிகள், பசுமாடுகள், காளைகள், எருமை, கன்றுகள், ஆடுகள், கோழிகள் என பக்தர்கள் நேர்த்திகடன்களாக செலுத்துகின்றனர்.வசதியுள்ள பக்தர்கள் தாமே உணவு தயாரித்து படையல் இட்டு நைவேதனம் செய்து மற்றவர்களுக்கும் அன்னதானமும் வழங்குகிறார்கள் 
    
 தலபெருமை:
     
 

சுவாமி சுயம்பு மூர்த்தி என்ற பெருமை பெற்றவர். உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படா அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் - அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்ட ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார்.3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலி பீட பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.


வேப்பெண்ணெய் மருந்து: வேப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபாடாற்றி ஐயன் அருள் மருந்தாகிய விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன. ஆறாத புண்கள் கட்டிகள் முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும் மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக்கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ் வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது.இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.


குழந்தைக்கு காப்பிடுதல்: பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்கு பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேசம்.குழந்தை பிறந்ததிலிருந்து இங்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்,பொட்டு கூட வைக்க மாட்டார்கள்.இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு பொட்டு வைக்கிறார்கள்.


 
     
  தல வரலாறு:
     
  தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) பகுதிக்கு வந்தார். இங்குள்ள பழமலைநாதர் கோயிலில் சிவபெருமான், , விருத்தாம்பிகையுடன் அருள் செய்கிறார். "விருத்தம்' என்றால் "பழமை' என்று பொருள். இந்த ஊர், கோயில் எல்லாமே மிகப்பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி, அவர்களை வணங்கிவிட்டு, பாடாமல் சென்று விட்டார். சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் விருப்பம். அம்பாளுக்கும் அதே விருப்பம் இருந்தது. உடனே சிவன், முருகனை அழைத்தார். முருகன் வேடுவ வடிவம் எடுத்து, சுந்தரரிடம் சென்று, அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் அபகரித்தார். இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் திருப்பித்தந்து விடு என சுந்தரர் வேடுவனிடம் கெஞ்சவே, அதை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மறைந்து விட்டார். இறைவன் செயலால் இப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொண்ட சுந்தரர், திருமுதுகுன்றம் வந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, பாடல் பாடி, இழந்ததை பெற்று சென்றார். சுந்தரரை வழிமறித்து வேடுவராக வந்த முருகப் பெருமானே திருமுதுகுன்றத்தின் மேற்கே சுயம்புமூர்த்தியாக தோன்றி சுந்தரருக்கு அருள்பாலிக்கிறார். முருகன் தோன்றிய இடத்தில் "குளஞ்சி' எனப்படும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் இவர் "குளஞ்சியப்பர்' எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் "கொளஞ்சியப்பர்' என திரிந்தது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar