Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் )
  அம்மன்/தாயார்: காந்திமதி, வடிவுடையம்மை
  தல விருட்சம்: மூங்கில்
  தீர்த்தம்: பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
  ஆகமம்/பூஜை : காரண ஆகமம், காமீக ஆகமம்
  ஊர்: திருநெல்வேலி
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

அக்குலா மரையினர் திரையுலா முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும் சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலியுறை செல்வர் தாமே.

-திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல்பெற்ற பாண்டிநாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.
 
     
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம், பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும். மூலவரான வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். இங்குள்ள விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்கு வடக்கு நோக்கியிருப்பது மிக அரிய கோலம். இங்கு மூலஸ்தானம் அருகில் உள்ள உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். இங்கு மார்கழிபூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. இதேபோல் சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 204 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நெல்லையப்பர்திருக்கோயில், திருநெல்வேலி- 627 001. திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 462 - 233 9910 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சன்னதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந்தீட்டப்பட்டுள்ளன. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது.

நெல்லையப்பர் கோயிலுக்குள் பொற்றாமரைக் குளமும், நடுவில் நீராழி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், நவகிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய மண்டபங்களில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நாட்டிலேயே மூன்றாவது பெரிய திருத்தேர் நெல்லையப்பர் திருத்தேர். அரியநாத முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட ரதவீதிகளில் 1505-ல் முதல்முறையாக தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இக்கோயிலில் உள்ள பொள்ளாப்பிள்ளையார் இதனை மலைமண்டலத்தைச் சார்ந்த முந்திக் கோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன் உருவாக்கினார் என்று கல்வெட்டில் எழுதப் பெற்றுள்ளது. பிள்ளையாருக்கு பிள்ளைத்தூண்டு விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. நெல்லை மக்கள் அம்பாள் காந்திமதியை அம்மை என்றும், நெல்லையப்பரை அம்மையப்பர் என்றும் அழைக்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பதன் மூலம், படித்தவர்கள் இவரை வணங்கினால், செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ செய்யலாம் என்று நம்புகிறார்கள். ஜாதகத்தில் புதன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில், 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு, குழந்தைப்பேறு பெற்றவர்கள், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த நேர்த்திக் கடனால் குழந்தைகள் விநாயகரின் பாதுகாப்பைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வர் என்பதும், கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதும் நம்பிக்கை. 
    
 தலபெருமை:
     
  வெண்ணிற ஆடை அம்பிகை:காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும்விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம்.

தனித்தனி பூஜை: நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.

காந்திமதி சீர் : பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள்.

பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, "காந்திமதி சீர்' என்பார்கள்.

அன்னம் பரிமாறும் அம்பிகை : இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது.

திருமால் மார்பில் லிங்கம்: மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூ ஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது. தன் தங்கையை மணந்த சிவனை, விஷ்ணு மார்பில் தாங்கினார். இதன் அடிப்படையில் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். இவரது கையில் தாரை வார்த்துக்கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கி றது.

அம்பிகைக்கு பிரதோஷம்: பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

தன்னில் நீராடும் தாமிரபரணி :
இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாகஎடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனை யும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.

மார்கழி பூஜை இல்லாத கோயில்: தை மாதத்தில் உத்ராயணம் துவங்குவதால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. ஆகவே, கோயில்களில் மார்கழி அதிகாலையில் திருவனந்தல் பூஜை நடக்கும். ஆனால், இங்கு மார்கழி பூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. இந்த 30 நாட்களும் சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இங்கு கந்தசஷ்டி ஐப்பசி அமாவாசையில் துவங்கி பவுர்ணமி வரையில் 15 நாட்கள் நடக்கிறது. அப்போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.

மான் வாகன துர்க்கை: இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் இருக்கிறாள். சிங்கமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் சக்தியை அவள் தருகிறாள். அருகில் அவளது தோழி இருக்கிறாள். அம்பாள் சன்னதியில் பண்டாசுரனை வதம் செய்த அம்பாளின் சிலை உள்ளது. இவளை "மஞ்சன வடிவாம்பிகை' என்பர். இவளையும் துர்க்கையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.

புதனின் மாறுபட்ட திசை: பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்குள்ள புதனோ, வடக்கு நோக்கியிருக்கிறார். இது மிக அரிய கோலம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் புதனின் திசையில் மாற்றமில்லை.

முக்குறுணி விநாயகர்:
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் இருக்கிறார். அதுபோல, இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன்? :
திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.

கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

பொன் திணிந்த பொருநை நதியில் அமைந்த பெரிய நகரம் திருநெல்வேலி. ஒருகாலத்தில் மூங்கில் வனமாக இருந்த காரணத்தால் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்ற பெயரும் உண்டு. மட்டுமின்றி நெல்லூர், வேணுவனம், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், தாருகா வனம், பிரம்மவிருந்தபுரம் ஆகிய பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு. கல்வெட்டு குறிப்பு ஒன்று, கீழ் வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்வேதி மங்கலம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகிறது. தண்பொருநைப் புனல்நாடு என சேக்கிழார் பிரானும் இந்த ஊரைப் போற்றிப் புகழ்கிறார்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பரோ, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி என்று, இவ்வூரின் நடுவே பாயும் தாமிரபரணியை சிறப்பிக்கிறார். தாமிரபரணி ஆற்றின் வட கரையிலும் தென் கரையிலும் அமைந்த திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்னும் இரட்டை நகரங்களில், திருநெல்வேலியின் நடுநாயகமாக விளங்குகிறது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்.
 
     
  தல வரலாறு:
     
 

வேதபட்டர் என்பவர் இறைவனுக்கு தினமும் நைவேத்யம் படைப்பதற்காக உலரப் போட்டிருந்த நெல் மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டு காப்பாற்றியதால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலமும் நெல்வேலி (திருநெல்வேலி) என பெயர்பெற்றது.


தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் பெரிய லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இவருக்கு மூங்கில் வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்கள் உள்ளன. இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு "சக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு.

இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள உள்ள சிவனையே ஆதிமூலவர் என்கின்றனர். இவருக்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி போன்ற திருநாமங்கள் உள்ளன.இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. வருமே மூலவராகவே வணங்கப் படுகின்றனர். இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்தி களையும் தரிசிக்கலாம்.


ஏறக்குறைய பாண்டியரின் இரண்டாம் தலைநகரம் என்ற அளவில் சிறப்புற்றிருந்தது திருநெல்வேலி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வீழ்த்திய பிறகு பாண்டிய நாடு சோழர்களின் வசமானது. 13-வது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி, பிறகு பிற்கால பாண்டியரின் வசம் வந்தது. பொருநை என்னும் தாமிரபரணி நதியாலும், அதன் கரையில், சிந்துபூந்துறை, கொக்கு உறைகுளம் என்று அருந்தமிழ்ப் பெயர்களை ஏற்றுத் திகழும் இடங்களாலும் சிறப்புற்ற நெல்லைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். பதினான்கு ஏக்கர் நிலப் பரப்பில், இரட்டைக் கோயில் அமைப்பில் இருக்கிறது.

காந்திமதியம்மன் - நெல்லையப்பர் திருக்கோயில். நிறை கொண்ட சிந்தையன் என்றும் நெல்வேலி கொண்ட நெடுமாறன் என்றும் சுந்தரரால் குறிக்கப்படும் நின்றசீர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னனால், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்யப்பட்டு, இந்தக் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே கூட, இந்தக் கோயில் பிரபலமாக விளங்கியதை, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களால் தெரிந்து கொள்கிறோம். வேணுவன புராணமும், திருநெல்வேலி தலபுராணமும் திருக்கோயில் சிறப்பை அற்புதமாக விவரிக்கின்றன. இந்த வனத்தின் வழியாக ராமக்கோன் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு செல்லும்போது, பாறை ஒன்று இடற மொத்த பாலும் கொட்டிவிட்டது. தொடர்ந்து சிலநாட்கள் இப்படியே நடக்கவே ஒருநாள் கோபத்துடன் ராமக்கோன் அந்தப் பாறையை வெட்ட, அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. தகவல் அறிந்த மன்னர் நேரில் வந்து பார்த்தபோது சிவபெருமான் அவருக்கு லிங்கவடிவில் காட்சி தந்ததாகக் கூறுகிறது தலவரலாறு.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar