SS நடராஜர் பத்து - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நடராஜர் பத்து
நடராஜர் பத்து
நடராஜர் பத்து

மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டல மிரண்டேழும் நீ.

பெண்ணம் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே.

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்கவந்த குரு நீ
புகழொணாக் கிரகங்க ளொன்பதும் நீ யிந்தப்
புவனங்கள் பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற அப்பனே
என் குறைக ளார்க் குரைப்பேன்.
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

மானாட மழுவாட மதியாடப் புனலாட
மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாடத் திரையாட
மறைதந்த பிரம்மனாட

கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட
குஞ்சர முகத்தனாடக்
குண்டல மிரண்டாடத் தண்டைபுலி யுடையாடக்
குழந்தை முருகேசனாட

ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதி னெட்டு
முனியாட பாலகருமாட
நரைதும்பை யறுகாட நந்தி வாகனமாட
நாட்டிப் பெண்களாட

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கண்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற யிரைதேடி
ஓயாம லிரவு பகலும்
உண்டுண் டுறங்குவதைக் கண்டதே யல்லாது
ஒருபய னடைந்தி லேனே

தடமென்ற மிடிகரையில் பந்தபா சங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ் வண்ணமாய்

இடையென்று கடைநின்று யேனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

பம்புசூ னியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல
பாதாள வஞ்சனம் பரகாய ப்ரவேச
மதுவல்ல சாலமல்ல

அம்புகுண் டுகள் விலக மொழியுமந் திரமல்ல
ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடி களல்ல
அரியமோ கனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போமுனி யிவரெலாங்
கூறிடும் வைத்யமல்ல

என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
யேதுளவு புகல வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

நொந்துவந் தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ

சந்ததமுந் தஞ்சமென் றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ.
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளை யில்லையோ
தந்தை நீ மலடுதானோ

விந்தையும் ஜாலமும் உன்னிட மிருக்குதே
வினையொன்று மறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை யிது வல்லவோ

இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லு
யினியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில் லாத போதிலும்
வாலாய மாய்க்கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதும்

மொழியெதுகை மோனை யிலாமலே பாடினும்
மூர்க்கனே முகடாகினும்,
மோசமே செய்யினும் தேசமே கவரினும்
முழு காமி யேயாகினும்

பழியெனக் கல்லவே தாய் தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் ஏசார்களோ
பாரறிய மனைவிக்குப் பாதியுட லீந்தநீ
பாலகனைக் காக்கொணாதோ?

எழில் பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்த நீ
யென் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

அன்னைதந் தைகளெனை யீன்றதற் கழுவனோ
அறிவிலா ததற் கழுவனோ
அல்லாமல் நான்முகம் தன்னையே நோவனோ
ஆசைமூன் றுக்கழுவனோ

முன்பிறப் பென்னவினை செய்தனென் றழுவனோ
மூடவறிவுக் கழுவனோ
முன்னிலென் வினைவந்து மூளுமென் றழுவனோ
முந்திவருமென் றுணர்வனோ

தன்னை நொந் தழுவனோ உன்னை நொந் தழுவனோ
தவமென்ன வென்றழுவனோ
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக் கழுவனோ

இன்னயென் னப்பிறவி வருமோ வென்றழுவனோ
யெல்லா முரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

காயா முன் மரமீது பூ பிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள்பறித் தேவயி றெரித்தனோ
கிளை வழியில் முள்ளிட்டனோ

தாயா ருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ
தந்த பொரு ளிலை யென்றனோ
தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தனோ
தவசிகளை யேசினேனோ

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ
வானவரைப் பழித்திட்டேனோ
வடவைபோல் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ

ஈயாத லோபி யென்றே பெயரெடுத்தனோ
யெல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

தாயாரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
தன்பிறவி யுறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெய ரெடுத்தென்ன
தரணியை யாண்டுமென்ன

சேயர் களிருந்தென்ன குருவா யிருந்தென்ன
சீடர் களிருந்து மென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிக ளெல்லாம்

ஓயாது மூழ்கிலும் என்ன பலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க
உதவுமோ யிதுவெல்லாம் சந்தையுற வென்றுதான்
உன்னிரு பதம் பிடித்தேன்.

யார் மீது உன்மன மிருந்தாலு முன்கடைக்
கண்பார்வை யது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

இன்னமுஞ் சொல்லவோ உன் மனங் கல்லோ
இரும்போ பெரும் பாறையோ
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ

என்னென்ன மோகமோ இதுவென்ன கோபமோ
யிதுவுமுன் செய்கைதானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவேனோ

உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ
உனை யடுத்துங் கெடுவனோ
ஓகோவிது உன்குற்ற மென்குற்ற மொன்று மிலை
யுற்றுப்பார் பெற்றவையா !

என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்
இனியரு ளளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரிய னிவரை
சற்றெனக் குள்ளாக்கி ராசி பன்னிரண்டையும்
சமமாய் நிறுத்தி யுடனே

பனியொத்த நட்சத் திரங்களிரு பத்தேழும்
பக்குவப் படுத்திப் பின்னால்
பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும் வெட்டிப்
பலரையும் அதட்டி யென்முன்

கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையும் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத் தொண்டரின்
தொண்டர்கள் தொழும்ப னாக்கி

இனியவள மருவு சிறு மணவைமுனி சாமியெனை
யாள்வதினி யுன்கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar