SS கிருஷ்ண த்வாதசநாம ஸ்தோத்ரம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கிருஷ்ண த்வாதசநாம ஸ்தோத்ரம்!
கிருஷ்ண த்வாதசநாம ஸ்தோத்ரம்!
கிருஷ்ண த்வாதசநாம ஸ்தோத்ரம்!

ஆயிரம் அஸ்வமேத யாக பலன் தரும் ஸ்ரீகிருஷ்ண த்வாதசநாம ஸ்தோத்ரம்:

ஸ்தோத்திரங்கள், மற்றும் மந்திரங்கள் இறைவனைப் புகழ்ந்து பாடும் பிரார்த்தனைகள் எனக் கொள்ளலாம். மந்த்ரம் என்பதற்கு மன்+ த்ர மந்த்ரம் (மனம் த்ராயதே இதி மந்த்ர:) - எதனால் மனம் காப்பாற்றப்படுகிறதோ, விடுதலையடைகிறதோ அது மந்த்ரம் என்று பொருள் சொல்லப்படுகிறது.

இந்த ஸ்தோத்திரங்கள் அனாதியானவை. வேத- உபநிஷதங்கள், ராமாயண, மஹாபாரத காவியங்களில் காணப்படுகின்றன. எட்டு வகை பக்திகளில் முதல் மூன்றாகிய சிரவணம், மனனம், கீர்த்தனம் இவை மூன்றுமே ஸ்தோத்திரங்களுடன் தொடர்புள்ளவை. இறைவனையே வேதமந்த்ர ஸ்வரூபன் என்று துதிக்கிறோம்.

ஸ்தோத்திரங்களை ஜபிப்பதால் மறுமையில் மட்டுமல்ல; இம்மையிலும் அளவற்ற பயன் அளிக்கிறது. இவற்றைச் சொல்வதனால் மனம் அலையாமல் ஒருமைப்படுகிறது. அதனால் நம் மற்ற வேலைகளையும் சிறப்பாகச் செய்ய முடிகிறது.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஸ்தோத்திரங்களில் மிகச் சிறப்பான ஒன்று மஹாபாரதம் வன பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதத்தில் வரும் ஸ்ரீகிருஷ்ண த்வாதசநாம ஸ்தோத்திரம் ஆகும். ஸ்ரீகிருஷ்ணனே அர்ஜுனனுக்கு த்வாரகையில் உபதேசித்தது. இந்த பன்னிரண்டு நாமங்களினால் எல்லா பாவங்களும் தொலையும்; அப்படியிருக்க விஷ்ணு சஹஸ்ரநாமம் எதற்கு என்று கேட்பதன் மூலம் இதன் பெருமையை கிருஷ்ணனே நிலை நாட்டியுள்ளார். ஸ்தோத்திரம்...

ஸ்ருணுத்வம் முனய: சர்வே கோபாலஸ்ய மஹாத்மன:
அனந்தஸ்யாப்ரமேயஸ்ய நாமத்வாதசம் ஸ்தவம்

(அனைத்து முனிவர்களே! அந்தமில்லாதவனும், மஹாத்மாவுமான கோபாலனுடைய த்வாதசநாம ஸ்தோத்திரத்தைக் கேளுங்கள்)

அர்ஜுனாய புரா கீதம் கோபாலேன மஹாத்மனா
த்வாரகாயாம் ப்ரார்த்தயதே யஸோதயாஸ்ச சன்னிதௌ

(முன்பு மஹாத்மா ஸ்ரீகிருஷ்ணனால் அர்ஜுனனுக்குச் சொல்லப்பட்டது. த்வாரகையில், யசோதையின் சன்னதியில் ப்ரார்த்திக்கப்படுகிறது).

ஸ்ரீகிருஷ்ண உவாச (ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார்)

கிம்னு நாமசஹஸ்ரேண விக்ஞாதேன தவார்ஜுன
யானி நாமானி விக்ஞாய சர்வ பாயை: ப்ரமுச்யதே
தானி நாமானி வக்ஷ்யாமி ஸ்ருணுக்ஷ்வ த்வம் மஹாமதே

(விஷ்ணு சகஸ்ரநாமம் எதற்கு? எந்த பகவந்நாமங்களைச் சொல்வதால் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைவாயோ அவற்றை உயர்ந்த மதியுடைய ஹே அர்ஜுனா! உனக்குச் சொல்கிறேன்: கேள்!)

ப்ரதமம் து ஹரிம் விந்த்யாத், த்விதீயம் கேஸவம் ததா
த்ரிதீயம் பத்மநாபம் து சதுர்த்தம் வாமனம் ததா

முதலாவது நாமம் ஹரி (ஹரதி இதி ஹரி:- துக்கம், பாபங்களைப் போக்குபவன்)

இரண்டாவது கேசவன் (அழகிய கூந்தல் உடையவன்; கேசி என்ற அரக்கனைக் கொன்றவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

மூன்றாவது பத்மநாபன் (உந்திக் கமலத்தான்) நான்காவது வாமனன் (குறுகிய உருவமுடைய வாமனன்)

பஞ்சமம் வேதகர்ப்பம் ச ஷஷ்டம் து மதுசூதனம்
சப்தமம் வாசுதேவம் ச வராஹம் ச அஷ்டமம் ததா

ஐந்தாவது வேதகர்ப்ப: (வேதங்களையெல்லாம் தன்னுள் அடக்கியவன்);

ஆறாவது மதுசூதனன் மது என்ற அரக்கனை வதைத்த மதுசூதனன்.

ஏழாவது வாசுதேவன் (வசுதேவன் மைந்தன், வாசு என்ற சொல் அனைத்துப் பிரபஞ்சத்தின் ஆன்மாவைக் குறிக்கும். எனவே வாசுதேவன் என்றால் சர்வ வ்யாபி என்றும் பொருள்படும்).

எட்டாவது நாமம் வராஹ: (விஷ்ணு பன்றி உருவமெடுத்த அவதாரம்.)

நவமம் புண்டரீகாக்ஷம் தசமம் து ஜனார்தனம்
கிருஷ்ணமேகாதசம் ப்ரோக்தம் த்வாதசம் ஸ்ரீதரம் ததா

ஒன்பதாவது புண்டரீகாக்ஷன் (கமலக் கண்ணன்):

பத்தாவது ஜனார்த்தனன். (ஜனங்களால் செல்வத்திற்காவும், மோக்ஷத்திற்காகவும் துதிக்கப்படுபவன்; தீயவர்களைத் தண்டிப்பவன் என்றும் பொருள்படும்).

பதினொன்றாவது கிருஷ்ணன் (கருமை நிறமுடையவன்; கர்ஷயதி இதி கிருஷ்ண:- ஆகர்ஷிப்பவன்/ ஈர்ப்பவன்; பாவங்களைப் போக்குபவன்)

பன்னிரண்டாவது நாமம் ஸ்ரீதரன் (ஸ்ரீ என்றால் திருமகள். லக்ஷ்மியை மார்பில் அணிந்தவன்.)

ஏதத்வாதச நாமானி மயா ப்ரோக்தானி பால்குண
காலத்ரயே படேந்நித்யம் தஸ்ய புண்ய பலம் ஸ்ருணு

(ஹே, பால்குணா! (உத்தர பால்குனி நக்ஷத்திரத்தில் பிறந்தவன்; அர்ஜுனன்) என்னால் சொல்லப்பட்ட இந்தப் பன்னிரண்டு நாமாக்களை எவர் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளையும் படிக்கிறார்களோ அவர்களுக்கு லபிக்கும் புண்ணிய பலன்களைக் கேள்!)

இனி வரும் ஸ்லோகங்கள் பலஸ்ருதி!

சாந்த்ராயண சகஸ்ரஸ்ய கன்யாதான ஸதஸ்ய ச
அஸ்வமேத சகஸ்ரஸ்ய பலமாப்னோதி மானவ:

(ஆயிரம் முறை சாந்த்ராயண விரதம் (இந்த விரதத்தில் அமாவாசையன்று உபவாசம் இருந்து வளர்பிறையில் ஒவ்வொரு கவளமாக அதிகரித்துப் பவுர்ணமியன்று 15 கவளங்கள் உணவு சாப்பிடுவது; மறுபடியும் தேய்பிறையில் ஒவ்வொரு கவளமாகக் குறைத்து, அமாவாசையன்று பட்டினி இருப்பார்கள். அது பொதுவாகப் பிராயச் சித்தமாகச் செய்யப்படுகிறது). நூறு கன்யாதானங்கள்.

ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்த பலனை இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் அடையலாம்).

பௌர்ணமாஸ்யாம் அமாவாஸ்யாம் த்வாதஸ்யாம் து விசேஷத:
சந்த்யாகாலே படேன்னித்யம் சர்வ பாபை: ப்ரமுச்யதே

(பவுர்ணமி அமாவாஸ்யை, த்வாதசி இதைப் படிப்பது விசேஷம். தினமும் சந்த்யா காலத்தில் படிப்பவர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar