SS ஸ்ரீ சாயி பவானி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீ சாயி பவானி!
ஸ்ரீ சாயி பவானி!
ஸ்ரீ சாயி பவானி!

1) ஜய ஈஷ்வர் ஜய சாயிதயாளா
நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்

2) தத்த திகம்பர ப்ரபூ அவதாரம்
இவ்வுலகமே உந்தன் கைவசம்

3) ப்ரஹ்மாச்யுத சங்கர அவதாரம்
சரணடைந்தோரின் பிராணதாரம்

4) தரிசனம் தாரீர் ஓ! என் பிரபுவே
போதும் இந்த பிறவிப் பிணியுமே

5) வேப்ப மரத்தினடியில் தோன்றினாய்
கிழிந்த கப்னியே பொன்னாடையாய்

6) பிக்ஷைபை தோளின் அணிகலனாய்
பக்கிர் ரூபத்தில் வலம் வந்தாய்

7) கலியுகத்தில் நீ அவதரித்தாய்
ஏழை எளியோரை உய்வித்தாய்

8) ஷீர்டியில் வாசம் செய்தாய்
ஜனங்களின் மனதை கொள்ளை கொண்டாய்

9) குழலூதும் கண்ணனும் நீயானாய்
வில்லேந்திய ராமனும் நீயானாய்

10) தயை நிரம்பியதே உந்தன் விழிகள்
அமுது சொரிந்ததே  உந்தன் மொழிகள்

11) புண்ய தலமானதே துவாரகமாயி
அங்கு வசித்தாரே எங்கள் சாயி

12) பாபாவின் துணி அங்கு எரியும்
நம் பாபங்கள் அங்கு தூசாகும்

13) வழிதவறிய அடியேன் பெருமூடன்
நீயே எம்மை வழிநடத்தும் ஆசான்

14) பல்லாயிரம் பக்தர் உனைப் பணிந்தனரே
கருணாமூர்த்தி எனை நீ மறவாதே

15) மூலே சாஸ்திரி என்ற அந்தணஸ்வாமி
உன்னில் கண்டார் குரு கோலம்ஸ்வாமி

16) விஷப்பாம்பு ஷமாவை தீண்டியுமே
விஷமிறக்கி அருளினாய் ஜீவனுமே

17) பிரளய மழையை சொல்லால் தடுத்தாய்
பக்தர்களை முக்தர்கள் செய்தாய்

18) கோதுமையை அரைத்தாய் அரவையிலே
அரவையில் காலராவும் அரைந்ததே

19) உன் திருவடியில் வைத்தேன் என் சிரம்
மனமிரங்கி அருளும் எனக்கு வரம்

20) மனதின் விருப்பம் நிறைவேற்றுவாய்
பிறவிக்கடலின் துன்பம் நீக்குவாய்

21) பக்த பீமாஜியும் நோயால் தவித்தான்
பலவிதமாய் சிகிச்சைகள் எடுத்தான்

22) உந்தன் பவித்ர உதி உண்டான்
க்ஷய ரோகம் போய் சுகமாய் ஆனான்

23)காகாஜி கண்டார் உன் திவ்யரூபம்
அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம்

24) தாமுவிற்கு அளித்தாய் சந்தானம்
அவர் மனம் பெற்றதே சந்தோஷம்

25) கிருபாநிதி, எனக்கு கிருபை செய்
தீனதயாளா! என் மேல் தயை வை

26) உடல், பொருள், மனம் யாவும் உமக்கே
அளித்திடுவாய் நற்கதி எமக்கே

27)மேகாவும் உன்னை அறியாமலே
முஸ்லீம் பேதம் கொண்டானே

28)உன்னில் காட்டினாய் சிவனையுமே
மேகாவும் அடைந்தான் பரமபதமே

29) எண்ணெய்க்குப் பதிலாய் நீரூற்றியுமே
ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்குமே

30) அதனைக் கண்டவர் மெய் மறந்தனரே
கேட்டவர் வியப்பு மாளவில்லையே

31) சாந்த் படீல் ஆழ்ந்தார் கவலையிலே
குதிரையை இருமாதம் காணவில்லையே

32) சாயி, நீ அவனுக்கு இரங்கினாய்
தொலைந்த குதிரையை மீட்டுத் தந்தாய்

33) நம்பிக்கை, பொறுமை மனதில் வை
 சாயி, சாயி என்றே தினமும் ஜபம் செய்

34) ஒன்பது வியாழன் விரதம் செய்வாய்
வெற்றி நிச்சயம் உமக்கே என்றாய்

35) தாத்யாவின் உயிர் ஊசலாடியதும்
தந்தாயே நீ உன் ஆயுளையும்

36) தாய் பாயாஜா அன்பாய் தந்த ரொட்டி
தாத்யா உயிரைக் காத்ததோ? சாயி

37) பசு, பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய்
அன்பாலேயே எமக்கு அரசனானாய்

38) எல்லோர்பாலும் உன் அருள் நோக்கு
பக்தனுக்களித்தாய் அமுத வாக்கு

39) திருவடி பணிந்த பக்தருக்கே
நீயே தந்தாய் அடைக்கலமே

40) அமுதினும் இனிய உன் வசனங்கள்
போக்கும் பக்தனின் மன விசனங்கள்

41) தூணில் துரும்பில் இருக்கின்றாயே
உன் லீலைகள் அற்புத பாடங்களே

42) உன்னைப் பாட சொற்கள் தேடுகிறேன்
அறிவிலி நான் மடமையில் தவிக்கிறேன்

43) தீனதயாளா, நீ கர்ணனினும் வள்ளல்
உன்னைத் துதித்தால் தொலையும் இன்னல்

44) ஓ! சாயி! என்மேல் தயை கொள்வாய்
திருவடிகளில் எம்மை ஏற்றுக் கொள்வாய்

45) காலை, மாலை எவ்வேளையும் நிதமும்
சாயி நாமம் நாவும் பாடிட வேண்டும்

46) திடபக்தியுடன் பாடும் பக்தனுமே
பரமபதம் நிச்சயம் அடைவானே

47) தினமும் காலை, மாலை இருவேளையும்
சாயி புகழ் பாடும் இப்பா வரிகளையும்

48) பக்தியுடன் பாடுபவன் துணையாவார் சாமி
அவரே நம்மைப் பெற்ற தாயி

49) சாயி லீலை உரைக்கும் இப்பதிகங்கள்
செப்பியவை அனைத்தும் ரத்தினங்கள்

50) நம்பிக்கை, பொறுமையுடன் சாயியை துதிப்போம்
தடைகள் அகற்றி நீங்கி வெற்றி அடைவோம்

51) சாயியே அகண்ட சக்தி ஸ்வரூபம்
மனதை வசீகரிக்கும் அழகு ரூபம்

52) தூய மனதுடன் ஸ்மரணை செய் என் மனமே
தினம் ஜபி சத்குரு சாயி நாமமே

அனந்த கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ராஜாதிராஜ யோகிராஜ
பரப்ரஹ்ம ஸ்ரீ சச்சிதானந்த
சத்குருசாயிநாத் மஹராஜ் கீ ஜய்
ஸ்ரீ சத்குரு சாயி நாதார்ப்பணமஸ்து


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar