SS ரதாரோகணக் காட்சி விநாயகர் பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ரதாரோகணக் காட்சி விநாயகர் பதிகம்
ரதாரோகணக் காட்சி விநாயகர் பதிகம்
ரதாரோகணக் காட்சி விநாயகர் பதிகம்

(விநாயகர் புராணச் சுருக்கம்)

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்
தவத்திரு கந்தசாமி சுவாமி அருளியது)

காப்பு (கட்டளைக் கலித்துறை)

சரதோற் பவநிலை யன்பர்க் கிடுமா வணிச்சதுர்த்தி
விரதோத் தமர்தம் விழிவிருந் தாகும் விநாயகத்தே
விரதோற் சவமாண் பிரதம் பொலியு மிசைத்தமிழ்ப்பா
வரதோத் திரமா வாக்குரு பாதம் வணங்குதுமே.

நூல் - எண்சீர் விருத்தங்கள்

1. பிரமனரி யுருத்திரனா மூவர்களும் புரிந்த
பெருந்தவத்துக் கிரங்கியருட் பேருருவங் காட்டிப்
பரவைமணற் கதிகமுறு மண்டவகை களின்சீர்
பார்த்துவர வயிற்றுள்விட்டப் பான்மீளப் புரிந்து
வரமநந்தங் கொடுத்தருள்வக் கிரதுண்டத் தேவுன்
மகிமையென்சிற் றறிவுகொண்டு மதிப்பெளிதோ விரங்கிக்
கரமளித்தாண் டமைத்தருள்வாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.

2. விளங்கபிசித் தின்மனைவி குணவதிபாற் பிரமன்
வீரியத்தாற் கருப்பமுற்று மேனிபெற்ற கணன்முன்
வளங்கொள்கபி லன்கதிர்ச்சிந் தாமணியைக் கொள்கான்
மாதவப்பே ருருக்காட்டி வன்கணற்கொன் றிருடி
யுளங்குளிர்ந்துன் பாற்புனைசிந் தாமணிப்பே ரேற்றா
யுற்றவிந்நா ளோராட லுஞற்றியடிச் சிறியேங்
களங்கமறா தென்னிசைப்பாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநா யகனே.

3. வேதனது கொட்டாவி தனிலுதித்து மகவாய்
வேண்டுவரங் கொண்டுலகர் வெம்பிமடிந் திடவே
தீதமைகை கொடுதழுவுஞ் சிந்தூரன் றன்னைச்
சிவைவயிற்றி லுதித்தானைத் திருமுகமேற் றருளிக்
கோதமையன் வைன்வடிவைக் கைகொடெடுத் தன்பிற்
குழைத்துமணம் பொழிசந்தக் குழம்பெனமேற் றிமிர்ந்தாய்
காதலுற்றே மெமக்கருள்வாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.

4. வேந்தபிநந் தனன்வேள்வி யழித்துலகை யலைக்கும்
விக்கினனை யழிப்பவரே ணியன்மனைப்பா லுதித்துச்
சாந்தமலி பார்சுவராச சிரமமிசை வளர்ந்து
சவுபரிசா பங்கொள்பெருஞ் சாளிமிசை யூர்ந்து
போந்தவிக்கி னனைவணங்கார்க் கிடர்புரிந்தெம் பாதம்
போற்றுநர்பா லகல்கவெனப் புகன்றருளா லாண்டாய்
காந்தமிசைந் தெமையீர்ப்பாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.

5.கொல்லால மொத்துமறை கவர்ந்துகொடுந் தீமை
குயிற்றுசங்கா சுரன்றுணையாக் குலவுகம லனைமுன்
மல்லாலப் பெயர்மறையோ னாவேதங் கொணர்ந்து
மாதவர்கட் கருளிவெம்போர் வயக்கியவ னுடலை
வில்லாருஞ் சூலத்தான் மூன்று துண்டம் படவே
வீழ்த்தியுயி ரினைப்பாத வீட்டமையப் புரிந்தாய்
கல்லானென் றெனைக்கழியேல் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநா யகனே.

6. மண்ணுருவி லுமைசதுர்த்தி பூசைசெயச்சோதி
மயவுருவங் காட்டியன்னை வாஞ்சனையிற் சுதனென்
றெண்ணுருவங் கொண்டுயர்பிந் தியமாயூ ரேச
ரென்றளவி லாட்டியற்றி யிடர்புரிசிந் துவினை.
நண்ணுபர சாலொழித்துத் தேவர்சிறை மீட்ட
நாதநின்மெய் நாதமுடிப் பரதமுடி யுடனே
கண்ணுமக மும்பொருத்தாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சி விநாயகனே.

7. சண்டனது வீரியத்தி லாங்கனலா சுரனாற்
சங்கடமுற் றிடுமிமையோர் சந்தோடம் பெறுமா
றுண்டருளி யெவ்விதத்துந் தீராவெப் பதனை
யுறுமறுகம் புல்லருந்தி யொழித்தெனை யொப் பாருந்
தொண்டரென வெளிதிலருச் சனைபுரிந்து போற்றுந்
துணிவமையக் கூட்டிநின் றூயவருண் மகிமை
கண்டனனோ கண்டிலனோ சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.

8. மாமருவும் புயத்திருமால் புத்திரெனன் றுதிப்ப
மாதவஞ்செய் மாதவன்சு முதைனையைக் கொல்லத்
தூமன் விடுஞ் சேனைமுற்று மாய்த்தவனைப் புகையாற்
றொலைத்தவர்க்கு வலிந்திருமைச் சுகங்களும்மீந் திடவே
சேமமலி தரும்பால சந்திரப்பேர் பெற்ற
திரங்கலிய னியற்றிடற்கஞ் சினதோசெப் பிடுவாய்
காமர்பொலி திருக்கோயிற் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே

9. மந்திரமூ லத்திலிசை சிவன்சக்தி யாண்பெண்
வாரணமாக் கூடவுரு வாய்ந்துகண பதியா
யிந்திரனா தியரடங்க விபுதைமின்மா கதப்பே
ரிருடியுட னிபவடிவுற் றீன்றகய முகனை
யுந்தியகொம் பாற்சாடி மாலுமைசா பத்தா
முரகவடி வொழித்தனையென் னுறுகணறி கிலையோ
கந்தியிலாங் கலிப்பொதும்பர்ச் சிரவணமாபுரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.

10. காசிபனு மதிதியுஞ்செய் தவத்தின்மகோற் கடப்பேர்க்
காதலனா யற்புதங்கள் கரையறவே காட்டிக்
காசிநகர் மன்னவன்மா தவமாயாண் டுற்றுக்
கதித்தசுராந் தகனைநராந் தகனைமடித் தருளி
யாசில்சித்தி புத்திமணங் கொண்டிறைசேய்ம மணமு
மாற்றிமறு மைச்சுகமு மளித்தனையெற் கெந்நாள்
காசினித்துன் பறுத்தருள்வாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே

11. பிரமசுரன் பெறும்வரத்தாற் றனதுசென்னி தானே
பிடித்தழியப் புரிமுகந்தன் பெறுமுகுந்தை நகரிற்
சுரரணுகா தாண்டவிர்கா சியையுமவ்வா றாற்றுந்
துராசதற்கா வுடுண்டிமெய்ப்பேர் தோய்ந்துமைபா லுதித்துச்
சிரமிசைத்தா ளமைத்தடக்கி ஞானமளித் ததன்பின்
திவோதாதன் றனக்கிருமைச் சீலமுமீந் திட்டாய்
கரவிலின் பென் றெமக்கருள்வாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநா யகனே

12. தவமலிம ரீசிமுனி யுள்விழைந்த வண்ணஞ்
சங்கரியை வல்லவைப்பேர் தாங்குமக ளாக்கி
நவமலிய மணந்துதிரு மாலருள்பன் னிரண்டு
நந்தனியார் களமைணந்து நாரணற்கின் புறவே
சிவமலிகீ தையையருளிச் சுகவிசுவ ரூப
தெரிசனமீந் தனைகடைக்கண் செலுத்தியெனக் குதிப்புங்
கவமலிசா வுந்தொலைப்பாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே

13. அம்பிகைதன் மகவானாய் வல்லபையா கச்செய்
தனிமணங்கொண் டாய் சிவனுக் காமுதற்சே யானாய்
மொய்ம்பிசைதே ரச்சொடித்தாய் திரிபுரத்தை யழிக்க
முன்னின்று பலவரமு முறையிலளித் திட்டாய்
தெம்பிசைமெய்ப் பிரணவத்தி னுட்பொருளா யெல்லாத்
தேவருமா யன்றிநின்றாய் திறமெவர்கண் டளப்பார்
கம்பிதமன் பர்க்கொழிப்பச் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.

14. குவிவார்ந்த மனத்துடனுன் சரித்திரங்கேட் போர்கள்
குலவுநல மத்தனையுங் கொள்வரெனத் தேற்றச்
செவிவாய்கொண்ட நுபவித்த வேதவியா சனுக்குந்
திறற்சோம காந்தனுக்குஞ் சிந்தித பேறளித்தாய்
புவிவாய்ப்பற் றமைத்திடுபுன் புல்வாய்ப் பட்டுள்ளம்
புழுங்குகந்த சாமியென்றன் புன்மொழியாற் றுதித்த
கவிவாய்ப்பக் கேட்டருள்வாய் சிரவணமா புரத்திற்
கவினிரதா ரோகணமெய்க் காட்சி விநாயகனே

வாழி வெண்பா

சிரவை நகர்வாழி சிங்கச் சதுர்த்தி
விரதவிழாப் போற்றமிகு மெய்ச்சீர் -வரமருவு
தொண்டரினத் தோடுலகிற் றோய்சுபங்க ளத்தனையும்
விண்டழைந்து வாழி மிக வே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar