SS சிரவை மூன்று பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிரவை மூன்று பதிகம்
சிரவை மூன்று பதிகம்
சிரவை மூன்று பதிகம்

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)

காப்பு வெண்பா


சேணுந் திசையார் சிரவணபு ரத்திலன்பர்
பேணுஞ் சிவலிங்கப் பெம்மான்மேற் - பூணுமியற்
பாக்கள் வரவென்னுட் பண்ணுமிரா மானந்தன்
நோக்கமையும் பேரருண்மன் னோ.

முதற்பதிகம்

நூல்

எண்சீர் விருத்தங்கள்

1. பிஞ்சுமதிச் சடைமுடியுங் கருணை மாரி
பெய்விழியு முகமலரும் பிறங்கு மெய்தோய்
நஞ்சுரகப் பூணணியார் தோளுந் தாளும்
நளினமலர்க் கரங்களும் வெண் ணகைச் செவ் வாய்சால்
கொஞ்சுமொழி யுமைவாமத் தமையு மின்பக்
கோலவருட் காட்சிவிழி குளிரத் தந்து
செஞ்சுகப்பூ ரணவருண்மெய் நிலையிற் கூட்டாய்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

2. புலத்தமையும் பெருமாயா மயக்காய்க் கன்மப்
போக்கிலெறி போக்கியமாய்ப் புவிவிண் ணும்பா
தலத்தமையு மின்பமெலாந் துன்பாய்க் காட்டுஞ்
சத்துடன்சித் தியலின்பச் சகச ஞான
நலத்தமையக் கூட்டுநின்றாள் கண்டு போற்று
நாளிதுவென் றாயினுநீ நவில வேண்டுந்
திலத்தமைநெய் போற்பூரிபூ ரணமா யென்றுஞ்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

3. இந்தணையுஞ் சடையாய்மால் விடையாய் தொண்ட
ரின்பமது ரத்தமிழ்ப்பா வேற்குந் தூய
நந்தணையுஞ் செவியானே குவியா தோடி
ஞாலவழக் கமிழுமன நாயேன் கண்முன்
வந்தணையும் படியிரந்தேன் வாஞ்சை முற்ற
வழங்கிலுனைத் தடுப்பவரார் வரம்பி லின்பச்
சிந்தணையுந் திருவருட்கண் ணுடைப்பெம் மானே
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

4. தித்திக்கு மெஞ்ஞானத் தேனூற் றாகிச்
செழுந்தவத்தோ ருளத்தடத்திற் றிளைத்தள் ளூறிச்
சத்திக்குங் கழனாதப் பதத்தாய் பாகஞ்
சத்திக்கின் புறவருளுந் தலைவா வென்னைப்
பத்திக்கும் படியவர்செல் கதியி லேற்றிப்
பவமிறப்பற் றிசைநிலையப் பாலா ரின்பஞ்
சித்திக்கும் படியடிகண் முடிமேற் சூட்டாய்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

5. கான்கலந்த விலங்கனையேன் கல்லா நெஞ்சக்
கல்லூடு தோன்றுகடுஞ் சொல்லேன் மாயை
யூன்கலந்த வபிமான முடையே னன்ப
ரொப்பாரி தனையருளா லுண்மை யாக்கி
வான்கலந்த ஞானானு பூதி யின்ப
வாழ்விலமைத் தாண்டருளன் மரபாந் தொண்டர்
தேன்கலந்த மலர்மணப்பா மாலை யேற்றுச்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

6. முன்னிலையாங் காட்சிகள்கண் டவைகட் கேற்ற
முறைபேசி யின்பதுன்ப மூட நின்றேன்
என்னிலையென் னேவரவு போக்கின் கால
மேதெனவுட் கூர்ந்துணரா வேழை நாயேன்
உன்னிலைகண் டுவந்துருகிப் பாடி யாடி
யொப்பில்பர மானந்த முறுவ துண்டோ
சென்னிலைகாட் டிடுபரமு முனதே கண்டாய்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

7. கரும்புருவச் சிலைசுரும்பர் நாணி யைம்பூங்
கணைக்கையிணைக் கரும்புருவக் கௌரி பாக
மரும்புருவ மிமைப்பொழுதும் விலகா தென்ற
னகம்புறங்கண் டேத்தியென தாக நாயேன்
விரும்புருவங் கரைந்திடுவான் வேண்டி நிற்பேன்
விண்ணப்பஞ் செவிசாய்த்து வினவி யுள்ளந்
திரும்புருவ மருவுபய மயமாந் தேவே
சிரவணமா நகர்விளக்குங் சிவபிரானே.

8. மோகமாற் றிடுமதன்பூங் கணையே றுண்டு
மொய்குழலார் மையன்மிக மூண்டு மாயா
போகமாற் றிடுந்துயரம் போக மாற்றும்
புண்ணியமா தவப்பெரியோர் புந்தி கோயி
லாகமாற் றிடுங்கருணை வாழ்வே யென்று
மற்றவர்கட் கற்றமையு மரசே நாயேன்
றேகமாற் றிடும் பொன்மயஞ் செய்தே யேற்பாய்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

9. இல்லாவின் புற்றமையுந் தேவர் யாரு
மேமாக்கச் சிவையையும்விட் டின்ப ஞானக்
கல்லாவின் புடையமர்ந்து நால்வர் தேரக்
கைகாட்டி யாண்டருண்மெய்க் காட்சி கேட்டுஞ்
சொல்லாலின் புறக்கதற்றிப் பிதற்று வேன்சிற்
சுகமுறுலுண் டோவருளிற் றோய்த்தாட் கொள்வாய்
செல்லாலின் புரிசைவிடைக் கொடிசான் மாட்சிச்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

10. தன்பதியென் றுற்றவிரா மானந் தப்பேர்த்
தமிழ்முனிவன் பேணிடத்தன் பதியாய் நாளும்
அன்பதிகப் பூசனைகொண்டின்பந் தேக்கு
மானந்தப் பழங்கடலே யருட்பொற் குன்றே
பொன்பதிகண் ணம்புயப்பூ மணந்த பாதப்
பூமணக்க வென்னிதயம் புகுந்தாட் கொள்வாய்
தென்பதியோன் வேள்விதியின் றுயர்தீர்த் தாள்வான்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.

11. மருப்பதியும் பூங்கோயின் மேவு மாதர்
வாசமிகப் பெற்றிசைவு மகிமை சான்ற
திருப்பதிகம் பெற்றபதித் திரளி லோங்குஞ்
சிரவணமா நகர்விளங்குஞ் சிவபி ரான்மேற்
கருப்பதியா நிலையருளக் குறித்து ளன்பிற்
கந்தசா மிச்சிறியேன் கழறும் பாடல்
விருப்பதிகங் கொடுதுதிக்கு மன்ப ருள்ளம்
வேண்டியவா றெய்துநல மேவு வாரே.

இரண்டாம் பதிகம்

கட்டளை கலித்துறைகள்

1. சமயச் சழக்கர் பொய் வாதத்தமைவில் சரதமிக்க
இமயச் சயிலப் பிராட்டியுங் கூடுற வெண்ணுறுமெச்
சமயத்து மென்விழி முன்னில காய்நின் சரண்சரணஞ்
சிமயக் கண்ஞ்சூழ் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

2. உலகத் தவம்புரி வோர்க்குற வாய்மிக வோடியென்றுங்
கலகத் தவசிய னாகிநின் றேனைமெய்க் காட்சியரு
ளிலகத் தவம்புரி யக்கணிப் பாய்கொங் கிசைமின்மணித்
திலகத் தவிருஞ் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

3. பண்டன் புரிமை யடியா ரியற்றிசைப் பாக்கியச்சீர்த்
தொண்டன் புயர்வையுட் கண்டஞ்சி னேனுன் றுணைத்திருத்தாள்
கண்டன்பு வந்தவர் போலாமொப் பாரிமெய்க் காட்சியுறத்
தெண்டன் புரிந்தேன் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

4. மன்மமெஞ் ஞான நிலையறி யேனென் மனத்தகத்துன்
பொன்மலர்த் தாள்கரு திக்கனி கின்றிலன் பூமிசையாங்
கன்ம முனக்கற் பிதம்புரிந் தாற்றிலன் கண்டடிமை
சென்ம மறுத்தாள் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

5. வெம்மை வினைப்பித் துடையே னெனினும் விரியருளா
ரம்மையு மப்பனு நீயேயென் றெண்ணின னாதலினென்
மும்மை மலப்பகை முற்றறுத் தானந்த முத்திதந்தாள்
செம்மை நலஞ்சால் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

6. பாலப் பருவத்தி லென்விளை யாடற் பயிற்சியுமுன்
கோலப் பணியிற்கொண் டாண்டாயிந் நாள்சினங் கொண்டனைபோன்
ஞாலப் பவத்திலிட் டேசோ தனைசெய்கை ஞாயங்கொலோ
சீலப் பலிதச் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

7. ஊற்றா கியநின் றிருவடி நாடி யுருகவெண்ணின்
மாற்றாகி மாயை பலவாய்ப் புலத்திசை வாஞ்சைகளாஞ்
சேற்றாகி மீளா தமிழ்த்தவெய்த் தேனொரு திக்கறியேன்
தேற்றாகி யாள்வாய் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

8. நாவாய்த்த வைந்தெழுத் தோதலு நின்புகழ் நற்றமிழ்ச்செம்
பாவாய்த் தழைத்ததிங் கன்பிசை யானந்த பாட்பம்விழிப்
பூவாய்த் ததும்பிய துன்றுணைச் சேவடி புந்தியுற்ற
தேவாய்த் தழையுஞ் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

9. அபபலன் மாற்றிநின் மாற்றியற் செம்பொ னடிநீனைவாந்
தபபலன் றானே யடையுமெய் யன்பருட் சார்ந்தவருட்
சுபபலன் மேலெதிர் காலத்திற் றோன்றத் தொடங்குமறைச்
செபபலன் போலுஞ் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

10. கோபத் திசையு முலோபத் திசையுங் குரோதமுடன்
பாபத் திசையும் வெஞ் சோபத் திசையும்பல் கோடிபெற்ற
வாபத் திசையுநெஞ் சிற்பத்தி ஞான வமலவின்பத்
தீபத் திசைநீ சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.

11. நல்வந் தனைத்திருத் தொண்டரு மண்டரு நாடுமியற்
செல்வந் தழையுஞ் சிரவைப் பதியின் சிவக்கொழுந்தை
வில்வந் தனைக்கடுப் பக்கந்த சாமி விளம்புதுதிச்
சொல்வந்த வாயின ருள்வந் திடுஞ்சிற் சுகநலமே.

மூன்றாம் பதிகம்

எண்சீர் விருத்தங்கள்

1. பூவின்மேற்பொலி நான்முகத்தவனும்
புணரிமேற்றுயில் புரியமச்சு தனும்
நாவின்மேற்றுதித் தேத்துநின்புரண
ஞானவானந்த நல்லருள்வடிவென்
கோவின்மேற்கருத் துள்விலகாது
குளிர்தரும்படி மிளிர்தரவொருக்காற்
சேவின்மேற்பொலி காட்சி தந்தருள்வாய்
சிரவணப்பதிச் சிவபெருமானே.

2. ஞாலமேவிய பண்பினையுளத்தி
னன்கறிந்திலே னாடின் மேன்மனிதர்
போலமேவிய வஞ்சகருறவாற்
புழுங்கிவாடியுட் பொய்யெனவெறுத்தேன்
கோலமேவிய தொண்டர் தம் புணர்ப்பாற்
குறைவிலின்பமுட் கொண்டுமிக்குவந்தேன்
சீலமேவிய நலமுழுதிசைக்குஞ்
சிரவணப்பதிச் சிவபெருமானே.

3. அக்கநீறுடன் புனைந்தவரெவர்க
ளாயினும்பணிந் தவர் செயலனைத்து
மொக்கநின்னதென் றிடுந்துணிவுடனே
யுண்மைத்தொண்டுசெய் வோர்க்குனதருளே
தக்கமெய்ப்பயன் றருமெனப்புரியேன்
சகத்தினிந்தைவந் தனைபுரிந்துழன்றேன்
செக்கர்வான்புரை மெய்யுடையானே
சிரவணப்பதிச் சிவபெருமானே.

4. பொருப்பிடைந்தவான் மாளிகையிடஞ்சால்
பொன்குவித்தணி பொலியுமங்களஞ்சான்
மருப்பிசைந்தகொங்கையர் விழிவழியே
மயங்குமின்பதி சயங்கடத்திடவே
குருப்பிரானென வந்தடியவருட்
கூடவைத்துமுட் குமைந்தனன்மனத்தைத்
திருப்பிவான்கதி நிலைபெறச்சேர்ப்பாய்
சிரவணப்பதிச் சிவபெருமானே

5. விருத்தனாகிப்பின் குமரனாப்பால
மெய்கொண்டாடல்கள் விளைக்குநின்னட்புக்
கருத்தமைத்துமேன் மேலுறப் பெருக்குங்
காரணத்திறம் பூரணம்பெறவுள்
ளிருத்தநாடிடி லென்வினைமறப்பென்
றிகலியோர்திரை யிடுமதையொழித்துத்
திருத்தனாகிடத் திருத்திமிக்கருள்வாய்
சிரவணப்பதிச் சிவபெருமானே.

6. மருவிளங்கியற் கற்பகநாட்டின்
மன்னுமும்பரும் வாஞ்சைகொண்மகிமை
யுருவிளங்கிய மானிடப்பிறப்பி னுண்மை
தோயரு ளுயர்ச்சியுள்ளுணர்ந்து
குருவிளங்கிய மேனிகொண்டுயிரின்
குலமெலாங்குளிர்ந் திடவிளையாடத்
திருவிளங்கிய வடிமுடிபுனைவாய்
சிரவணப்பதிச் சிவபெருமானே.

7. துற்பித்தாட்டிசை யைம்புலவேடர்
சூழ்ச்சியாற்சுகந்துக்க முண்டென்னக்
கற்பித்தாட்டுமென் கன்மனக்குரங்கைக்
கட்டிமாதவக் கனலிலிட்டெரிக்க
வற்பித்தாற்றினனுன்பணி வெறுக்கா
தன்பினாலுகந் தாண்டுகொண்டருள்வாய்
சிற்பித்தாக்கமை முகிலணிமாடச்
சிரவணப்பதிச் சிவபெருமானே.

8. கன்னியம்பிகை யணிமுதிர்முதிராக்
கனதனக்கொடி யாய்க்கணிதமறப்
பின்னியம்புவி யுடலுயிர்த்திரள்கள்
பெற்றதாய்பிரி யாப்பதியுன்னை
யன்னியம்பட விடச்சகிக்கில்லா
வடிமையென்றன தகம்புறத்திசைவாய்
சென்னியம்பொலி சென்னியம்பொலியாய்
சிரவணப்பதிச் சிவபெருமானே.

9. மற்கிருத்திமம் வியந்திடவுயிரை
வதைத்துவன்பிண மாந்தியெக்களிக்குந்
துற்கிருத்தியர் யாவருங்கணத்தே
துடித்திறக்கமெய்ச் சுபமிசைவலியென்
சொற்கிருத்திய வேண்டுமென்றுன்னைத்
தோத்திரம்புரிந் தனன்றுணைபுரிவாய்
தெற்கிருத்திடா தன்பர் கொண்டாடுஞ்
சிரவணப்பதிச் சிவபெருமானே.

10. அலையுலாவிய கடலினையுழுந்தி
னளவதாக்கியங் கைக் கொடுண்டருள்வான்
கலையுலாவினன் புரியுணியேற்றுட்
களிப்புமிக்கமை வாய்கடையவனென்
னிலையுலாவிய நெஞ்சகத் தின்பா
னின்றுலாவிட வென்றுகாண்குவனோ
சிலையுலாவு செங் கையுடையானே
சிரவணப்பதிச் சிவபெருமானே.

11. புகரிபத்திர ளுலவணிமறுகிற்
பொன்னங்கொம்பனார் புரிவிளையாடற்
சிகரிநேர்மணி மடாகூடந்தோய்
சிரவணப்பதிச் சிவபெருமானை
முகரிதச்சிவ ஞானமெய்த்தொண்டர்
முளரித்தாட்பொடி முடிக்கந்தசாமி
நிகரிலன்புறத் துதித்த பாவோது
நேயர்நெஞ்சகந் தோயுமெய்நிலையே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar