SS வைராக்ய பஞ்சகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வைராக்ய பஞ்சகம்
வைராக்ய பஞ்சகம்
வைராக்ய பஞ்சகம்

விஜய நகர சாம்ராஜ்யத்தின் மந்திரியாக இருந்த ஸ்ரீவித்யாரண்யர், வைஷ்ணவ ஆச்சாரியரான வேதாந்ததேசிக ஸ்வாமிகளின் வறுமையை நீக்க விஜய நகரத்திற்கு எழுந்தருளுமாறு வேண்டினார். தேசிகர் தமது வைராக்யத்தை ஒரு ஸ்லோகமாக்கி பதில் எழுதினார். ஸ்ரீவித்யாரண்யர் மீண்டும் வற்புறுத்தவே மேலும் ஐந்து ஸ்லோகங்கள் இயற்றி தமது வைராக்யத்தை விளக்கினார். அவையே வைராக்ய பஞ்சகம் எனப் போற்றப்படுகின்றன.

முதல் ஸ்லோகம்:


க்ஷோணீ கோண சதாம்ச பாலந கலா துர்வாரகர்வாநல
க்ஷுப்யத் க்ஷுத்ர நரேந்த்ர சாடு ரசநா தந்யாந் ந மந்யாமஹே
தேவம் ஸேவிதுமேவ நிச்சிநுமஹே யோஸஸௌ தயாளு: புரா
தாநா முஷ்டி முசே குசேல முநயே தத்தே ஸ்ம வித்தேசதாம்

பூமியின் ஏதோ ஒரு மூலையில் நூற்றில் ஒரு பகுதியான நாட்டை ஒருவன் ஆளுகிறான். ஆனால் அதைக் கொண்டே அவனுக்குக் கர்வம் உண்டாகிறது. மனிதர்கள் அவனைப் புகழ்கிறார்கள். ஆனால் நாம் அவற்றை எல்லாம் ஒரு துரும்பென மதிக்கிறோம். ஏனெனில் கிருஷ்ணர் குசேலரின் கையிலிருந்து ஒரு பிடி அவலை வலுவில் ஏற்று, அந்த ஏழை அந்தணனுக்குக் குபேர சம்பத்தை அருள் புரிந்தார். அப்படிப்பட்ட எல்லாம் வல்ல இறைவனுக்கே ஊழியம் செய்வதற்காக நம்மை அர்ப்பணித்திருக்கிறோம்.

வைராக்ய பஞ்சகம்:

1. ஸிலம் கிமநலம் பவே தநல மௌதரம் பாதிதும்
பய: ப்ரஸ்ருதி பூரகம் கிமுந தாரகம் ஸாரஸம்
அயத்ந மலமல்லகம் பதி படச்சரம் கச்சரம்
பஜந்தி விபுதா முதா ஹ்யஹஹ குக்ஷித: குக்ஷித:

வயலில் சிந்திய நெல்மணிகளே நம் பசியைத் தீர்க்க போதுமானதாகாதா? ஒரு கையளவு நீர் நமது தாகத்தைத் தீர்க்காதா? மானத்தை மறைப்பதற்கு கவுபீனமாகப் பாதையில் கிடக்கும் ஒரு கிழிந்த துணி போதாதா? இதையும் விட நமக்கு என்ன வேண்டும்? ஆனால் அந்தோ! நன்கு கற்றுணர்ந்த அறிஞர்களும் தகுதியற்ற மனிதர்களைப் புகழ்ந்து வாழ்க்கையை நடத்துகின்றனரே! என்ன பரிதாபம்!

2. ஜ்வலது ஜலதி க்ரோட க்ரீடத் க்ருபீட பவ ப்ரபா:
ப்ரதிபட படு ஜ்வாலா மாலாகுலோ ஜடராநல:
த்ருணமபி வயம் ஸாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிகா-
பரிமள முசா வாசா யாசாமஹே ந மஹீச்வராந்

கடலினடியில் எல்லாவற்றையும் எரிக்க வல்ல குதிரை வடிவில் உள்ள வடவாமுகாக்னி என்ற தீ எப்போதும் எரிந்து கொண்டிருப்பதுபோல் நமது வயிற்றுக்குள்ளும் ஜாடராக்னி உள்ளது. அதுவும் இடைவிடாது ஆகாரம் வேண்டி பசியுடன் சுடர் விட்டு எரியட்டும். ஒரு போதும் நான் ஒரு அற்ப பரிசினைப் பெறுவதற்காக மாலையில் மலரும், வாசம் நிறைந்த மல்லிகை போல் இனிய சொற்களால் எந்த அரசனையும் வேண்ட மாட்டேன்.

3. துரீச்வர த்வார பஹிர் விதர்திகா
துராஸிகாயை ரசிதோஸய மஞ்ஜலி:
யதஞ்ஜநாபம் நிரபாய மஸ்தி மே
தநஞ்ஜய ஸ்யந்தந பூஷணம் தநம்

இரக்கமற்ற பிரபுக்களின் வாயிலில் காத்துக்கிடக்கும் அவல் நிலைக்கு ஒரு கும்பிடு போடுகிறேன். ஏனெனில் அர்ஜுனனின் தேரை அலங்கரித்த, மைபோல் கருநிறம் உடையதும், குறைவற்றதுமான கண்ணன் எனும் செல்வம் என்னிடம் உள்ளது.

4. சரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதநாத்
அபிந்தந தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம்
தநஞ்ஜய விவர்தனம் தநமுதூடகோவர்தநம்
ஸுஸாதந மபாதநம் ஸுமநஸாம் ஸமாராதநம்

நாய்களைப் போல் சாகும்வரை பிறரை அண்டிப் பிழைப்பு நடத்துகின்றனர் சிலர். அவ்வாறு ஈட்டும்பொருள் நிந்திக்கத் தகுந்தது. நான் தேடும் நிதி அர்ஜுனனுக்கு நன்மை செய்தது. கோவர்த்தன மலையைத் தூக்கி, கோகுலத்தைக் காத்தது. கேடற்றது. நல்லோரை மகிழ்விப்பது.

5. நாஸ்தி பித்ராஸஸர்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம்

என் தந்தை வழியாகக் கிடைத்த சொத்து ஏதும் இல்லை. நானும் பொருள் சேர்க்கவில்லை. ஆனால் என் பாட்டனாரின் (பிரம்ம தேவனின்) வழி வந்த சொத்து காஞ்சியில் அத்திகிரியின் மேல் (வரதராஜ பெருமாள்) நிரந்தரமாக உள்ளது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar