நீர்நிலைகளை தெய்வமாக கருதி வழிபடும் மனநிலை,உலகம் முழுவதும் இருந்துள்ளது. ரிக் வேதம் துவங்கி, பாரதி வரை நமது மண்ணிலும் அந்த வழிபாட்டு நீட்சியை காண முடியும்.
இந்து புராணங்களின்படி, தேவ அசுர போர்களில், தேவர்கள் பக்கம் நிறைய உயிரிழப்பு ஏற்பட்டது. அசுரர்கள் பக்கம் இறந்தவர்களை, சுக்கிராசாரியார் தனது மந்திரம் ஒன்றால், உயிர்பிழைக்க வைத்தார்.
அந்த மந்திரத்தை கற்றுக் கொள்ள , இந்திரன் மகன் கச்சன், சுக்கிராசாரியாரிடம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கூடி ஆலோசித்த தேவர்கள், விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பாற்கடலை கடைந்து அமுதம் எடுக்க திட்டமிட்டனர்.
அதன்படி, பாற்கடலின் மையத்தில், மந்தர மலை மத்தாக நடப்பட்டது. வாசுகி கயிறாக பூட்டப்பட்டது. அமுதத்தில் பங்குண்டு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாசுகியின் தலைப்பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களும் நின்று கடைந்தனர்.
அசுரர்களின் பலத்தால், வாசுகியின் வாயில் இருந்தும், பாற்கடலில் இருந்தும் தோன்றிய விஷங்கள் ஒன்று சேர்ந்து ஆலகால விஷமாக உருவெடுத்தது.
தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, சிவபெருமான் அந்த விஷத்தை உண்டு தேவர்களை காத்தார். தொடர்ந்து நடந்த முயற்சியில், அமுதம் கிடைத்தது
அந்த அமுதத்தை பங்கிடுவதில் பிரச்னை உண்டானது. மோகினி உருவெடுத்து வந்த விஷ்ணு, அந்த அமுத பானையை, அசுரர்களுக்கு தெரியாமல் கொண்டு சென்றார். அவரை அசுரர்கள் துரத்தினர். அப்போது, அந்த பானையிலிருந்து நான்கு அமுத துளிகள் பூமியில் பிரயாகை (அலகாபாத் நகர் அருகில் உள்ளது), ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் சிந்தியதால் அந்த நான்கு இடங்களும் புனிதத்துவம் பெற்றன.
அந்த இடங்களில் நடக்கும் கும்பமேளாக்களில் கலந்து கொண்டு அங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால், பாவம் நீங்கும் என்ற நம்பிக்கை உருவானது.
பிரயாகையின் மகிமை
- உலகை படைத்த பிரம்மா, அது தூய்மை பெறுவதற்காக, பிரயாகையில் யாகம் செய்தார்
- பிரயாகையில், கங்கை, யமுனை ஆறுகளில் தலா இரண்டு துறைகளும் (காட்), சங்கமத்தில் இரண்டு துறைகளும் உள்ளன
- பரத்வாஜர், சீதை லட்சுமணனுடன் ராமன், ஆதிசங்கரர், சைதன்யர் ஆகியோர் பிரயாகையில் தங்கியிருந்தனர்
மவுன அமாவாசை
- புராணங்களின்படி, இந்த உலகத்தை முதன்முதலில் உருவாக்கியவர் மனு மகரிஷி. இவர் தோன்றிய நாள் தான் தை அமாவாசை.
இது மவுன அமாவாசையாக அனுஷ்டிக்கப்படுகிறது
- இந்த நாளில் தான், சூரியனும், சந்திரனும் மகர ராசிக்குள் பிரவேசிக்கின்றனர்
- இந்த நாள் முழுவதும் மவுன விரதம் இருந்து, விஷ்ணுவை பிரார்த்திக்க வேண்டும். அதன் மூலம் மனித மனங்களில் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியம் என்ற ஆறு பகைகளும் நீங்கி, அறிவு தெளிவாகும்
செய்ய வேண்டியவை/கூடாதவை
- பாதுகாப்பு கருதி, மேளா நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே யாத்ரீகர்கள் நீராட வேண்டும்
- யாத்ரீகர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே, ஆற்றில் நீராடலாம்
- அலகாபாத் நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப் பட்டிருக்கிறது
- ஒரே படகில் அதிகம் பேர் ஏறுவது தவிர்க்கப்பட வேண்டும்
- ஆற்றில் குளிக்கும் போது 'சோப்' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
- வழிபாடு மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை நடமாடும் பாதைகளில் தூக்கி எறிவதை தவிர்க்க வேண்டும்
கும்பகோணமும் கும்பமேளாவும்
மாசி மாதத்தில், குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசித்து, அன்று பவுர்ணமியும், மக நட்சத்திரமும், ரிஷப லக்னமும் இருந்தால் அன்று தான் மகாமக புண்ணிய தினம். புராணங்களின்படி அன்றைய தினத்தில், கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில், கங்கை உள்ளிட்ட அனைத்து நதிகளும் ஒன்று சேர்வதாக நம்பிக்கை. அன்று அந்த குளத்தில் நீராடினால், எல்லா பாவங்களும் நீங்கும்.
பிரளய காலத்தில், பிரம்மா, அமுதத்தை ஒரு கும்பத்தில் வைத்து, இமயமலை உச்சியில் வைத்தார். பிரளய வெள்ளத்தில் அந்த கும்பம் அடித்து செல்லப்பட்டு, மேடான ஒரு இடத்தில் தங்கியது. அந்த இடம் தான் கும்பகோணம். சிவபிரான் ஒரு வேடனாக வந்து, அந்த கும்பத்தை அம்பால் அடித்து உடைத்தார். அதில் இருந்த அமுதம் லிங்க வடிவமாக நிலை கொண்டது. அதுதான் கும்பேசுவரர் கோவில். சங்க இலக்கியத்தில் குடந்தை என்றும், தேவாரத்தில் குடமூக்கு என்றும் அறியப்பட்ட இந்த தலம் தற்போது கும்பகோணம் என வழங்கப்படுகிறது.
கும்பகோணத்தில் நடக்கும் மகாமகம், தென்னகத்தின் கும்பமேளாவாக கருதப்படுகிறது. அப்பர் அடிகள் தமது குடந்தை தேவாரத்தில் (6ம் திருமுறை), ‘தாவி முதல் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை’ என, போற்றுகிறார்.
'பூவணத்தவன்' என துவங்கும், 5ம் திருமுறை பதிகத்தில், கங்கை, கோதாவரி, சரசுவதி ஆறுகள், குடந்தையில் தங்கியிருப்பதாக கூறுகிறார்.
கும்பம் என்றால் மாசி மாதம். மாசி மகத்தில் வரும் நீராடலுக்கு கும்பமேளா என்று பெயர். வளத்திற்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புஷ்டி புஷ்யம் என்ற வார்த்தைகள் வளத்தை குறிக்கின்றன. தமிழகத்தில் தைப்பூச புனித நீராடல் சங்ககாலம் துவங்கி, இந்நாள் வரை கொண்டாடப்படுகிறது. முற்காலத்தில், வருணனுக்குரிய வழிபாடாக இருந்த புனித நீராடல், தற்போது, வேறு பரிமாணங்களில் தொடர்கிறது என்றே இதை கருத வேண்டியுள்ளது.
எஸ்.ராமச்சந்திரன், தொல்லியல் அறிஞர்
கும்பமேளா வரலாற்று சிறப்புகள் :
கி.பி.,7ம் நூற்றாண்டில் , இந்தியாவுக்கு வந்த
சீன யாத்ரீகர் யுவான் சுவாங், பிரயாகையில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டார். அந்த கும்பமேளா, 75 நாட்கள் நடந்தது. அவரது குறிப்பு
தான் வரலாற்றில் கும்பமேளா பற்றிய முதல் குறிப்பாக கருதப்படுகிறது
மற்ற மூன்று இடங்களில் நடக்கும் கும்பமேளாவை விட, பிரயாகை கும்பமேளாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இங்கு தான் கங்கை,
யமுனை ஆறுகளோடு, கண்ணுக்கு தெரியாத அந்தர்வாகினியான சரஸ்வதி ஆறும் ஒன்று சேர்வதாக நம்பப்படுகிறது
சூரியன், சந்திரன் மகர ராசியிலும், குரு மேஷ
ராசியிலும் பிரவேசிக்கும் போது, பிரயாகையில் கும்பமேளா நடக்கிறது. நிரஞ்சன தீர்த்தம், கபில தீர்த்தம், பரசுராம தீர்த்தம், ஆதித்ய தீர்த்தம்
உள்ளிட்ட பல தீர்த்தங்கள் இருப்பதால் பிரயாகை "தீர்த்தங்களின் அரசன்' என வழங்கப்படுகிறது
எப்படி செல்வது
சென்னை எழும்பூர்,
சென்ட்ரலில் இருந்து
கீழ்க்கண்ட ரயில்கள்
அலகாபாத் செல்கின்றன.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.