புதுடில்லி : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளைக்கு புதிய சட்டம் கொண்டு வர தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குஉரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 9ம் தேதி தீர்ப்பளித்தது.அதில் சர்ச்சைக்குரிய நிலம் மத்திய அரசுக்கு சொந்தமானது. இதை ராமர் கோவில் கட்ட வழங்க வேண்டும். கோவில் கட்டுவதை பார்வையிட அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் அறக்கட்டளை அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளைக்காக பார்லி.யில் மசோதா நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அறக்கட்டளை அமைக்க புதிய சட்டம் தேவையில்லை. அறக்கட்டளை அமைப்பதில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.