பதிவு செய்த நாள்
20
நவ
2019
05:11
திருக்கோவிலூர்: மணலூர்பேட்டையில் சாலை விரிவாக்க பணியின் போது சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில், ஆஞ்சநேயர் கோயில் அருகே, சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையின் குறுக்கே இருந்த பழைய கல்வெட்டை அகற்றி அகலப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டது.
இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெ.சி.பி., மூலம் பழைய கல்வெட்டு இடிக்கப்பட்டது. அதிலிருந்த கற்பலகைகளை அருகிலிருந்த பூந்தோட்டத்தில் குவித்து வைத்திருந்தனர். கற்குவியல் பலகைகளின் இடையில் புடைப்பு சிற்பங்களுடன் கூடிய பலகை ஒன்று இருந்ததை நேற்று அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர். இதனை சுத்தம் செய்து பார்த்தபோது, ஒரு கையில் மானும் மற்றொரு கையில் தீச்சட்டி ஏந்திய ஒவரின் தலையில் கையும், மற்றொரு கையில் உடுக்கையும், கத்தியும் இருந்தது. இது துர்க்கை, பிச்சாடனர் அல்லது அங்காளமூர்த்தி சுவாமியாக இருக்கலாம் என அப்பகுதியில் இருந்தவர்கள் யூகிக்கின்றனர். சுவாமி சிலை கிடைத்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சிலைக்கு மஞ்சள் குங்குமம் இட்டு மாலை அணிவித்து வழிபடத் தொடங்கினார்கள்.
மிகவும் பழமையான புடைப்புச் சிற்பம் என்பதை ஒரு தரப்பினர் முழுமையாக உறுதி செய்தாலும், இது எந்த சுவாமி, எந்த காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் அப்பகுதியில் உள்ள கோயில்கள், கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர்களின் முழு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என்கின்றனர் விவரம் அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள்.