பதிவு செய்த நாள்
21
நவ
2019
11:11
மணலி:மணலி, திருவுடைநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவாலயங்களில், வடகிழக்கு பகுதியில், பைரவருக்கு சன்னிதி உள்ளது. காவல் தெய்வமாக வணங்கப்படும், பைரவரை, அஷ்டமி நாளில் வழிபட்டால், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்னை தீரும். பாவங்கள், பயத்தை போக்குவார் என்பது ஐதீகம்.பைரவரை வழிபட, தேய்பிறை அஷ்டமி சிறப்பான நாளாகும். நேற்று முன்தினம் இரவு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிவாலயங்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.அதன்படி, மணலியில் பிரசித்தி பெற்ற, திருவுடைநாதர் உடனுறை திருவுடை நாயகி கோவிலில் உள்ள, ஜென்மாஷ்டமி பைரவர் சிறப்பு வழிபாடு, வெகு விமரிசையாக நடந்தது. பைரவர் சன்னிதி முன், கலசம் நிர்மாணிக்கப்பட்டு, யாக வேள்வி நடத்தப்பட்டது. பின், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் கலச புறப்பாடாகி, கோவில் வளாகத்தை சுற்றி வந்து, கலசநீர் அபிஷேகம் நடந்தது.சந்தன காப்பு அணிவிக்கப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவருக்கு, பஞ்ச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு வழிபாட்டில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.