பதிவு செய்த நாள்
21
நவ
2019
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண, 14 இடங்களில் அகன்ற திரை அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் டிச.,10ல், அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் ஆண்டிற்கு, ஒரு முறை ஒரு நிமிடம் மட்டும் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன் கூடிய மகா தீபத்தை காண, லட்சக்கணக்கானோர் போட்டிபோடுவர். ஆனால், கோவில் வளாகத்தில், 6,000 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதனால், கோவில் வளாகத்தினுள் சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர் களுக்கு வசதியாக. கிழக்கு ராஜகோபுரம் , மேற்கு கோபுரம், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரத்தின் வெளிப்புறம், கோவிலினுள் ஐந்தாம் பிரகாரத்தில் பெரிய நந்தி அருகில், கலையரங்கம், மகிழமரம், உள்துறை அலுவலகம், மாட வீதியில் பெரிய தேர் நிலை நிறுத்துமிடம், தேரடி முனீஸ்வரன் கோவில் மற்றும் காந்தசிலை அருகில் என, 14 இடங்களில் அகன்ற திரை அமைத்து, அதில் நேரடி ஒளிபரப்பு மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட உள்ளது.