பதிவு செய்த நாள்
21
நவ
2019
03:11
திருப்பூர் : வைரவிழா மண்டல பூஜை விழாவையொட்டி, திருப்பூர் ஐயப்ப சுவாமிக்கு, வீரராகவப்பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில், நாளை ஆறாட்டு உற்சவம் நடக்கிறது.
திருப்பூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை வைரவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, ஆறாட்டு விழா, நாளை நடக்கிறது. அதிகாலை, 4:30 மணிக்கு, மகா கணபதி ேஹாம பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, ஐயப்ப சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.ஆறாட்டு உற்வத்துக்கு பின், மாலை, 6:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, சிறப்பு அலங்காரத்தில், ஐயப்ப சுவாமி பவனி செல்கிறார்.
பஞ்சவாத்தியம், செண்டை வாத்தியம், ஒயிலாட்டம், வானவேடிக்கை, அலங்கார வேடிக்கையுடன், நொய்யல் பாலம், சடையப்பன் கோவில், வாலிபாளையம், கோர்ட் வீதி, குமரன்ரோடு, டவுன்ஹால், ரயில்வே மேம்பாலம் வழியாக, ஐயப்பன் கோவிலை சென்றடைகிறது.விழாவையொட்டி, வரும் 23ம் தேதி துவங்கி, டிச., 28 ம் தேதி வரை தினமும் மாலை, 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஐயப்ப பக்த ஜனசங்கம் மற்றும் ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.தெப்பக்குளம் தயார்பெருமாள் கோவில் தெப்பக்குளம். பாசி படர்ந்து, அசுத்தமாக மாறியிருந்தது. ஆறாட்டு உற்சவத்துக்காக, ஐயப்ப பக்தர்கள் சார்பில் நேற்று தெப்பக்குளம் சுத்தம் செய்யப்பட்டது. தெப்பக்குளம் சுத்தப்படுத்தப்பட்ட பின், துாய்மையான தண்ணீரால் நிரப்பப்பட்டது. குளத்துக்குள் இருந்த சில்லறை காசுகள் தனியே எடுத்து, வெயிலில் உலர்த்தப்பட்டன. அதன்பின், கோவில் உண்டலில் செலுத்தப்பட்டன. கோவில் அதிகாரிகள் யாரும் வராததால், முறையான அனுமதி பெற்று, பக்தர்களே இப்பணிகளை மேற்கொண்டனர்.