திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் போது பருவத ராஜகுலத்தினர் மட்டுமே மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்றவர்கள். அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள். திருவண்ணாமலை நகரில் அவர்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு
பருவதராஜனின் மகளாக பார்வதி தேவி அவதரித்தார். இவர்கள் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பார்வதி அவதரித்த வம்சாவழியை சேர்ந்தவர்களே திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி வருகின்றனர். தீபம் ஏற்றக்கூடிய 5 பேர், 48 நாட்கள் விரதமிருப்பர். இவர்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து, மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் இவர்களிடம் வழங்குவார்கள். மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு இவர்க்ள் கொண்டுசெல்வார்கள். பின் மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இட்டு, அதன் மீது, கற்பூர கட்டிகளை குவிப்பார்கள். அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகையன்று மாலை 5.58 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளுவார். அப்போது, கோயில் கொடிமரம் அருகே இருக்கும் அகண்ட தீபத்தை பருவத ராஜகுலத்தினரே ஏற்றுவார்கள். அதைத்தொடர்ந்து, அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்
மகா தீபம் ஏற்றும்போது முழங்கும் பாடல்
பருவத ராஜகுல மரபினர் மாமலை மீது மகா தீபம் ஏற்றும்போது, அவர்கள் சங்கொலி முழங்க அண்ணாமலையாரை போற்றி, விண்ணதிர முழங்கும் பாடல் வரிகள்:
கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஜோதியாய் மலைமீது நிற்கும் அண்ணாமலை போற்றி..! உண்ணாமுலை அம்பிகைக்கு இடபாகம் அளித்து
அர்த்தநாரீஸ்வரராய் நிற்கும் அண்ணாமலை போற்றி..! எங்கும் எப்போதும் எல்லோரையும் கைவிடாமல் காத்து அருள்புரியும் அண்ணாமலை போற்றி..! ஞான தபோதனரை வாவென்று அழைத்து வாழ்வளித்து காக்கும் அண்ணாமலை போற்றி..!
எங்கிருந்து நினைத்தாலும் நினைத்தபோதே முக்திஅருளும் அண்ணாமலை போற்றி..! மாலும் நான்முகனும் முயன்றும் அடி முடி அறியாமல் நின்ற அண்ணாமலை போற்றி..!
ஓங்கி வளர்ந்து ஒளியாய் காட்சியளித்து காத்தருள் புரியும் அண்ணாமலை போற்றி..! வள்ளால ராஜாவுக்கு மகனாய் தோன்றி அண்ணலும் அம்மையுமாய் காட்சி அளிக்கும் அண்ணாமலை போற்றி..!
புண்ணியம் ஒன்று செய்தால் பலவாக வெளிபட்டு அருள்மழை பொழியும் அண்ணாமலை போற்றி..! விட்டிடில் கஷ்டமாம் விட்டிடாது உனை உயிர் விட்டிட அருள்புரி அண்ணாமலை போற்றி..! தேவரும், அடியாரும் தொழும்போது துணையாகும் அண்ணாமலை போற்றி..!