சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவுக்கு தினமும் 104 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 15 நாட்கள் முன்னதாக அறைகளை பதிவு செய்ய முடியும்.
சபரிமலையில் முக்கிய வழிபாடான நெய்யபிஷேகம் மதியத்துக்கு பின் கிடையாது. இதனால் மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள் சபரிமலையில் தங்கி அடுத்த நாள் அதிகாலை அபிஷேகம் நடத்தி ஊர் திரும்புகின்றனர். இவ்வாறு தங்கும் பக்தர்களுக்காக மாளிகைப்புறம், பாண்டித்தாவளம், பெரியநடைப்பந்தல் ஆகிய இடங்களில் இலவச வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறிய குடில்கள் கட்டப்பட்டு அவை வாடகைக்கு கொடுக்கப்படுகிறது. தேவசம்போர்டுக்கு சொந்தமான 11 கட்டடங்களில் 466 அறைகள் வாடகைக்கு கொடுக்கப்படுகிறது. இதில் 104 அறைகள் ஆன்லைன் முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.www.onlinetdb.com என்ற இணையதள முகவரியில் 15 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய முடியும். 350 ரூபாய் முதல் 2200 ரூபாய் வரை கட்டணம் உள்ள அறைகள் உள்ளது. ஆன்லைனில் 24 மணிநேரத்துக்கும், தேவசம் கவுன்டரில் 12, 16 மணி நேரத்துக்கு என அறைகள் பெற முடியும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சன்னிதானத்தில் உள்ள அலுவலகத்தை அணுகி அறை ஒதுக்கீடு பெறலாம்.