பதிவு செய்த நாள்
05
டிச
2019
11:12
சபரிமலை: சபரிமலையில், 16 நாட்களில், 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில், 40 சதவீதம் பேர், ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள். சபரிமலையில் மண்டல காலம், நவ., 17-ல் துவங்கியது.
16 நாட்களில், 7.7 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில், இரண்டு லட்சத்து, 96 ஆயிரத்து, 110 பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள். 3,823 பேர், புல்மேடு வழியாக வந்துள்ளனர். இம்மாதம் முதல், மூன்று தினங்களில், 1.50 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கூட்டம் உள்ள நாட்களில், பெரிய நடைப்பந்தலை தாண்டி, சந்திராங்கதன் ரோடு வரை வரிசை இருக்கிறது. கூட்டம் அதிகமானாலும், சிறப்பான தரிசனம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறினார். மண்டல காலம் துவங்கியது முதல், 20 லட்சம் டின் அரவணை விற்பனை ஆகியுள்ளது; 15 லட்சம் டின் ஸ்டாக் உள்ளது.தினமும், இரண்டு லட்சம் டின் தயாரிக்கப்படுகிறது. ஒன்பது லட்சம் பாக்கெட் அப்பம் விற்பனை ஆகியுள்ளது. தினமும், 1 லட்சம் பாக்கெட் அப்பம் தயாராகிறது. தமிழகத்தில் இருந்து பஸ்சில் வரும் பக்தர்கள், கேரள எல்லை வரை வந்து, பின், கேரள அரசு பஸ்சில் பம்பை வருகின்றனர். இவர்களின் வசதிக்காக பஸ் இயக்க, கேரள அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, நாகர்கோவில், கோவை, பொள்ளாச்சி, மதுரை, பழநி ஆகிய இடங்களுக்கு கேரள அரசு பஸ்கள், இந்த வார இறுதியில் இயக்கப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.