சபரிமலை: சபரிமலையில் பிளாஸ்டிக்கை தவிர்க்க இனி இருமுடியில் பிளாஸ்டிக் இருக்காது என போலீசார் ஐயப்பன் மீது சத்தியம் பெறுகின்றனர்.
சபரிமலை காடுகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டுவிட்டது.பக்தர்கள் கொண்டு வரும் பாலிதீன் பைகளுக்கு பதிலாக செங்கண்ணுார், நிலக்கல், பம்பை போன்ற இடங்களில் துணிப்பை கொடுக்கப்படுகிறது. இருப்பினும் இருமுடி பை பொருட்களின் பாலிதீன் கவர்கள் இன்னும் சவாலாகவே உள்ளது.பொரி, அவல் போன்ற பொருட்களின் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பன்னீர் பாட்டில்கள் மாளிகைப்புறம் பகுதியில் மலைபோல் குவிகிறது. இவை பாண்டித்தாவளத்தில் இயந்திரம் மூலம் எரிக்கப்படுகிறது.இதை தவிர்க்க குழுவாக அமர்ந்திருக்கும் பக்தர்களிடம் போலீசார், அடுத்த ஆண்டு வரும் போது எங்கள் குழுவினர் பிளாஸ்டிக், பாலிதீன் கொண்டு வரமாட்டோம் என ஐயப்பன் மீது சத்தியம் பெறுகின்றனர். இது நல்ல பலனை தருவதாக துப்புரவு பணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.