சபரிமலை : சபரிமலையில் திருப்பதியை போல் காணிக்கையை எண்ண தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் கோயில் முன்புள்ள உண்டியலில் போடும் காணிக்கை கன்வேயர் பெல்ட் மூலம் காணிக்கை எண்ணும் இடத்துக்கு செல்கிறது. அங்கு ஊழியர்கள் அதை பிரித்து இயந்திரம் மூலம் எண்ணுகின்றனர். இந்த ஆண்டு புதிய இடத்தில் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. 200 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் நாணயங்களை எண்ணி பேக்கிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் நாணயங்கள் தரம் பிரிக்கப்பட்டு அது எடை போட்டு தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இதை சபரிமலையிலும் நடை முறைப்படுத்த ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவசம்போர்டு, ஓய்வு பெற்ற துணை ஆணையர் தலைமையில் குழுவை நியமித்து திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் 35 ஊழியர்கள் பழைய காணிக்கை எண்ணும் இடத்தில் நியமிக்கவும், வைக்கம் கலாபீடத்தில் இருந்து 50 மாணவர்களை பயிற்சி அடிப்படையில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.