பதிவு செய்த நாள்
08
டிச
2019
03:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஏழாம் நாள், கார்த்திகை தீப விழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பா் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஏழாம் நாளில், அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப தேரோட்டத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி மாட வீதி உலா வந்த போது அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்ற கோஷத்துடன், பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது.
கரும்பு தொட்டில் நேர்த்திக்கடன்: திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று, குழந்தை வரம் கேட்டு வேண்டுதல் செய்த பக்தர்கள், கரும்பு தொட்டிலில் தங்கள் குழந்தையை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜன், குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டார். அதனால், அருணாசலேஸ்வரரே, வள்ளாள மஹாராஜாவுக்கு குழந்தையாக பிறந்ததாக, தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை நினைத்து வழிபட்டு வேண்டுதல் வைப்பர். அதன்படி, குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியர் நேற்று, தங்கள் குழந்தையை, கரும்பு தொட்டிலில் வைத்து சுமந்து, மாடவீதி வலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.