சபரிமலை: இருமுடி கட்டும் இடத்தில் இருந்து பக்தர்கள் சபரிமலையில் பாலிதீன் விழிப்புணர்வை ஆரம்பிக்க வேண்டும் என கேரள போலீஸ் ஐ.ஜி., விஜயன் கூறினார்.
இவர் எஸ்.பி.யாக இருந்த போது சபரிமலை தனி அதிகாரி பொறுப்பு வகித்தார். 10 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் பாலிதீன், பிளாஸ்டிக் தவிர்ப்பதற்காக புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டத்தை உருவாக்கினார். பின் அது வெளியிடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் பாலிதீன் கழிவு குறைந்து வருகிறது. பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக், பாலிதீன் கழிவை திரும்பி ஊருக்கே கொண்டு செல்லும் வகையில் பக்தர்களுக்கு பை வழங்கப்படுகிறது. ஆனால் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் பன்னீர் குப்பிகள், பூஜை பொருட்கள் கொண்ட பாலிதீன் பைகள் சவாலாக உள்ளன. இதை தடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
புண்ணியம் பூங்காவனம் என்ற திட்ட ஒருங்கிணைப்பாளரான ஐ.ஜி., விஜயன் கூறியதாவது: சபரிமலை காடுகளை பாதுகாக்க வேண்டியது பக்தர்கள் கடமை. அப்போதுதான் எதிர்கால சந்ததியினர் இயற்கையான சூழலில் வந்து செல்ல முடியும். காகித பையில் பூஜை பொருட்களை கொண்டு வரலாம். இதுபற்றி வெளிமாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.