பதிவு செய்த நாள்
10
டிச
2019
12:12
சபரிமலை : சபரிமலையில் மொபைல் ரீசார்ஜ் வசதியுடன் தற்காலிக தபால்நிலையம் செயல்பட துவங்கியுள்ளது. சபரிமலையில் மகரஜோதி தரிசனம் சீசனையொட்டி தற்காலி தபால்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வரும் ஜன.,20ம் தேதி வரை செயல்படவுள்ளது. கோவிலுக்கு நேரில் வர முடியாத பக்தர்கள் பிரார்த்தனை, வேண்டுதல் கடிதங்கள், திருமணம் போன்ற வீட்டு சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கலாம். கடிதங்களை சேகரித்து, கோவிலுக்கு அனுப்பி வைக்கும் பணியை, சிறப்பு தபால் நிலையம் மேற்கொள்கிறது.
ஜியோ தவிர அனைத்த மொபைல் நெட்வொர்க்குகளுக்கு ரீசார்ஜ் செய்யப்படும். தபால்தலைகளில் அவரவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்யும் மை ஸ்டாம்ப் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த தபால்நிலையத்தில் வரும் அனைத்து தபால்களிலும், 18 படிகளுடன் கூடிய சிறப்பு முத்திரை அச்சிடப்படுவது கூடுதல் சிறப்பு. தபால்நிலைய அதிகாரி ஐயப்பன் தலைமையின் கீழ் இரண்டு தபால்காரர்கள், நான்கு பன்முக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும், காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை தபால்நிலையம் செயல்படும். தபால் நிலைய தற்காலிக பின்கோடு எண்: 689713. விபரங்களுக்கு, 04735 - 202130 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.