பதிவு செய்த நாள்
11
டிச
2019
10:12
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளையொட்டி, நேற்று காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:00 மணிக்கு, பால், தயிர், நெய், சந்தனம், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, தங்க கவசத்துடன் சுப்பிரமணிய சுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மருதமலையில், கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். காலை, 11:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா வந்தார். கார்த்திகை தீபத்திருநாளில் முக்கிய நிகழ்ச்சியான, திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி மாலை, 5:00 மணிக்கு துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு, தீப கம்பத்தில் மகா தீப விளக்கு ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமி தங்க தேரில் திருவீதியுலா வந்தார். கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி மருதமலையில் நேற்று, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். தீபத்திருநாளையொட்டி, 170க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.