சித்திரைத்திருவிழாவின் எட்டாம்நாள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இறைமாட்சி அதிகாரத்தில், திருவள்ளுவர் மன்னர்களுக்குரிய குணங்களை வரிசைப்படுத்தும் போது, தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் இருப்பவனே சிறந்த மன்னன் என்று குறிப்பிடுகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியாக மீனாட்சி அன்னையும் தூங்காமல் அருளாட்சி நடத்துகிறாள். மீன் எப்படி கண்களை இமைக்காமல் முட்டைகளை பார்த்து குஞ்சாக்குகிறதோ அதுபோல, அம்பிகையும் தன் அருள்பார்வையால் குறைகளைப் போக்கி உயிர்களை நல்வழிப்படுத்துகிறாள். அதனால், மீன் போன்ற கண்களை உடையவள் என்னும் பொருளில் மீனாட்சி, கயற்கண்ணி ஆகிய பெயர்களோடு விளங்குகிறாள். அவள் ஆளும் நகரமும் தூங்கா நகரமாக உள்ளது. மலையத்துவஜ பாண்டியனின் மகளாகப் பிறந்த மீனாட்சி கல்வியிலும் சிறந்து விளங்கினாள். அஞ்சாத நெஞ்சுறுதியும், மனத்துணிவும் அவளுடைய இயல்பாக இருந்தன. வீரத்தின் அடையாளமாக அவளுடைய இடுப்பில் குறுவாள் ஒன்றை வைத்திருப்பாள். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் மலையத்துவஜ பாண்டியனும், தன் மகளுக்கு பட்டம் சூட்டி அழகுபார்த்தான். புராணகாலத்தில் நடந்தகோலாகல விழா இப்போதும் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நடத்தப்படுகிறது.