பதிவு செய்த நாள்
23
ஏப்
2012
05:04
சித்திரைத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக்விஜயத்தன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் பவனி வருகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது வீரத்தை நிலைநாட்டுவதற்காக நாலாபுறமும் படையெடுத்துச் செல்வதுவழக்கம். பாண்டியநாட்டின் ராணியான மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர் தடாதகை. இதற்கு மூன்று தனங்களை உடையவள் என்று பொருள். பட்டம் சூட்டியதும் திக்விஜயம் (எட்டு திசைகளுக்கும் செல்லுதல்) புறப்பட்டாள். தேர், யானை,குதிரை, காலாட்படை ஆகிய நாற்படைகளும் ஆயத்தமாயின. வாத்தியங்கள் முழங்க மீனாட்சி தேரில் ஏறினாள். அமைச்சர் சுமதி உடன் சென்றார். மீனாட்சி பூலோகம் முழுவதையும் கைப்பற்றினாள். பின்,அவளது பார்வை விண்ணுலகத்தின் மீது பட்டது. ஒவ்வொரு திசையிலும் ஆட்சி செய்யும் அஷ்டதிக்பாலகர்களின் மீது போர் தொடுத்தாள். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வென்று வெற்றிவாகை சூடினாள். அதன்பிறகும் விட்டாளா! சிவபெருமான் ஆட்சிபுரியும் கயிலாயத்தையே கைப்பற்ற கிளம்பிவிட்டாள் அந்த வீரராணி. சிவகணங்கள் அவளை எதிர்க்க முடியாமல் திணறி ஓடின. நந்திபகவானாலும் தடுக்க முடியவில்லை. சிவ பெருமானே நேரில் வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த திருப்பாதமும், பாம்பும், மழு ஏந்திய கரமும், வெண்ணீறும், கற்றைச் செஞ்சடையும்,ஞான அக்னி வீசும் நெற்றிக்கண்ணும் கண்ட மீனாட்சி, அவரை எதிர்கொள்ள முடியாமல் நாணினாள். அந்த சமயத்தில், அம்பிகையின் மார்பில் இருந்த மூன்றாவது தனம் ஒரு கணத்தில் மறைந்தது. நாணம் பிறந்தது. வானில் அசரீரி ஒலித்தது. கொன்றைவார் சடையனான இறைவன் சிவபெருமானே உன் முன் நிற்கிறார். அவரே உனக்கு மணாளன் என்று ஒலித்தது. சிவபெருமானும், நான் மதுரைக்கு வந்து உன்னை மணம் செய்து அருள்வோம் என்று வாக்களித்தார். பூலோகத்தையும் தேவலோகத்தையும் வென்று, இறைவனின் மனதையும் வென்று அதில் இடம்பிடித்த அன்னையை வணங்க பெருமிதத்துடன் புறப்படுவோம்.