பதிவு செய்த நாள்
28
டிச
2019
12:12
மன்னிக்கும் மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!
இந்த புத்தாண்டு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் மலர்கிறது. பொருளாதார வளம் சீராக இருக்கும். ஆண்டின் முற்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. எந்த ஒரு செயலையும் சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். எந்த விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடித்தால் வாழ்வில் நிம்மதி நிலைக்கும். ஆனால் மார்ச் 27க்கு பிறகு தடையின்றி முயற்சிகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தேவைகள் பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனால் ராகுவால் சில பிரச்னை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மார்ச் 27க்கு பிறகு கைகூடும். புதிய வீடு கட்ட யோகமுண்டு. ஆனால் அதற்காக கடன் வாங்குவீர்கள். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அனுகூல பலன் உண்டாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. மார்ச் 27க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். புதிய பதவி தேடி வரும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக பெண்கள் திகழ்வர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ராகு ஆக.31க்கு பிறகு காரிய அனுகூலம், பொருளாதார வளம், குடும்ப மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சியைக் கொடுப்பார்.
* வியாபாரிகளுக்கு ராகுவால் ஆக.31க்கு பிறகு ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் டிச.26க்கு பிறகு மறையும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை நன்மையான காலகட்டம்.
* ஐ.டி., துறையினர் மார்ச் 27க்கு பிறகு திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறுவர்.
* மருத்துவர்கள் சீரான முனனேற்றம் காண்பர். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு முன்னேற்றம் காணலாம்.
* வக்கீல்கள் ஆண்டின் இறுதியில் அனுகூல பலன் காண்பர். வழக்குகளின் முடிவு சாதகமாக இருக்கும்.
* ஆசிரியர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை சிறப்பான பலன் பெறுவர். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.31க்கு பிறகு உயர்ந்த நிலையை அடைவர் .சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
* கலைஞர்களுக்கு மார்ச் 27க்கு பிறகு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போதிய வருமானம் கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் சீரான பலன் காண்பர். ஆக.31க்கு பிறகு பணம், புகழ் கிடைக்கும். எதிர்பார்த்த பதவியும் சிலர் கிடைக்கப் பெறுவர்.
* விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். புதிய சொத்து வாங்குவர்.
* மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை பசுவளர்ப்பில் போதிய வருமானம் கிடைக்கும்.
* மாணவர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு சனி பகவானால் தொழிலில் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம்.
* வியாபாரிகளுக்கு நிர்வாகச் செலவு அதிகரிக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறு வரலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலர் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர்.
* ஐ.டி., துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
*அரசியல்வாதிகளுக்கு ஆக.31க்கு பிறகு முயற்சிகளில் தோல்வி ஏற்படலாம். எதிர்பார்த்த புகழ் கிடைக்காமல் போகலாம்.
* விவசாயிகளில் சிலர் கடன் பிரச்னையை சந்திக்கலாம். நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பரிகாரம்:
● வெள்ளிக் கிழமையில் பத்ரகாளி வழிபாடு
● சனிக்கிழமையில் அனுமனுக்கு அர்ச்சனை
● இயன்ற போது பசுவுக்கு அகத்திக் கீரை