பதிவு செய்த நாள்
13
ஜன
2020
02:01
கோத்தகிரி;கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், நேற்று ஹெத்தையம்மன் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிராம கோவிலில், கடந்த, 6ம் தேதி துவங்கிய விழாவில், அம்மனை மடிமனைக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில், விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வீட்டிற்கு செல்லாமல் மடிமனையில் தங்கி, நாள்தோறும் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.திருவிழா நாளான நேற்று பகல், 12:00 மணிக்கு, மடிமனையில் இருந்து, செங்கோல் பக்தர்கள், வண்ண குடைகளின் கீழ், அம்மனை கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு சுத்தக்கல்லில் அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை, 5:00 மணிக்கு, சுத்தக்கல்லில் இருந்து, அம்மனை கிராம கோவிலுக்கு, ஆரவாரத்துடன், அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு செங்கோல் பக்தர்களின் பாரம்பரிய சுற்று நடனம் இடம் பெற்றது.இதேபோல, பேரகணி, பெத்தளா, கூக்கல், எப்பநாடு, சின்ன குன்னுார் மற்றும் பெப்பேன் கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இரவு, கோவில்களில் கத்திகை எனப்படும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவை ஒட்டி, கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கிராமங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.