பதிவு செய்த நாள்
14
ஜன
2020
10:01
சேலம்: பெருமாள் கோவில்களில் நடந்து வரும், ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் திருநாளான, நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடந்தது. சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த, 6ல் நடந்தது. அன்றிலிருந்து ராப்பத்து உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. கொள்ளைக்காரனாக இருந்த திருமங்கை மன்னனை திருத்தி, ஆட்கொண்ட பெருமாளின் லீலையை போற்றும் வகையில், ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாளான நேற்றிரவு, 7:00 மணிக்கு உடல் முழுவதும், 12 திருநாமங்கள் இட்டுக்கொண்டு, தங்க பெட்டியை திருடிச்செல்லும் கொள்ளையனை பிடிக்க, பெருமாளே குதிரை வாகனத்தில் எழுந்தருளி, விரட்டிச்சென்று பிடித்தார். ஆண்டுதோறும் இந்த உற்சவம், சேலம் வாழ் சவுராஷ்டிரா மக்களால் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல், சேலம் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலிலும், குதிரை வாகனத்தில் கையில் சாட்டையுடன் தங்க பெட்டியை கவர்ந்து செல்லும் திருமங்கை மன்னனை, சவுந்தரராஜர் விரட்டிச்சென்று பிடித்து ஆட்கொண்ட நிகழ்ச்சி நடித்து காட்டப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.