* சூரியனுக்கு ‘அர்க்கன்’ என்றொரு பெயருண்டு. ‘அர்க்கம்’ என்றால் ‘எருக்கு’. இதனால் தான் சூரியனார்கோவிலில் தல விருட்சமாக எருக்கம் செடி உள்ளது. * அம்பிகை மீது ஆதிசங்கரர் பாடிய பாடல் ‘சவுந்தர்ய லஹரி’ . இதில் ‘சசி- மிஹிர- வக்ஷோருஹயுகம்’ என்ற சொல் வருகிறது. இதற்கு சூரியன், சந்திரன் மூலம் உயிர்களுக்கு பாலுாட்டுபவள் பராசக்தி என்பது பொருள். * சூரிய ஒளியைப் பெற்றே தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நடத்தி இலை, காய், பழம் என சேமிக்கின்றன. எந்த வகையாக இருந்தாலும் அது இருக்கிறது. இவற்றை நாம் சாப்பிடும் போது கிடைக்கும் சக்தி, சூரிய ஒளிக்கற்றை மூலமே கிடைக்கிறது. * சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. தொல்காப்பியத்தில் சூரியனை ‘ஞாயிறு’ என்றே குறிப்பிட்டுள்ளனர். ‘ஞா’ என்றால் ‘நடுவில் தொங்குகிற’. ‘யிறு’ என்றால் ‘இறுகப் பற்றிக் கொண்டுள்ள’. நடுவில் இருக்கும் சூரியன் மற்ற கிரகங்களை இறுகப் பற்றிக் கொண்டுள்ளது. * ‘சூரியன்’ என்னும் சொல்லுக்கு ‘இயக்குபவன்’ என பொருள் உண்டு. இந்த உலகையே இயக்குபவர் என்பதால் அவருக்கு நாம் விழா எடுக்கிறோம். * மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம் தை. ஒளி வடிவான இவர் மகரத்திற்கு செல்வதால் தான், சபரிமலையில் ஐயப்பன் மகர ஜோதியாகக் காட்சி தருகிறார்.