நம் எதிர்காலத்தை அறிய ஜோதிடம் வழிகாட்டுகிறது. ஒருவரின் ஜாதகத்திற்கு பலன் சொல்லும் போது நவகிரகங்களின் இருப்பிடத்தைக் கொண்டே பலன் சொல்வர். இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என வாழ்வின் அனுபவம் எல்லாம் கிரகங்களின் பெயர்ச்சிகளாலேயே ஏற்படுகின்றன. இந்த கிரகங்களின் தலைவராக இருப்பவர் சூரியனே. சிம்ம ராசியின் அதிபதியான இவர் மேஷ ராசியில் உச்சபலம் அடைகிறார். இக்கால கட்டத்தை ‘அக்னி நட்சத்திரம்’ என்பர். சூரியனின் நிலையை வைத்தே மனிதனின் உடல்நலம், ஆன்ம பலம், ஆன்மிக யோகத்தை அறிய முடியும். குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் சூரியனுக்கு நெருங்கிய நண்பர்கள். இந்த கிரகங்களை சூரியன் பார்த்தாலோ, சேர்ந்தாலோ நன்மை அதிகரிக்கும்.