பசுக்களின் நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குணம் இருப்பதாக தேன்விருந்து என்னும் நுாலில் வாரியார் குறிப்பிடுகிறார். தெய்வீக குணம் மிக்க கரியநிற பசுவின் பால் சிறந்தது. வாதநோய் போக்கும் இந்தப் பசுவை காராம்பசு, கபிலா எனக் குறிப்பிடுவர். கோயில் அபிஷேகத்திற்கும், ஹோமத்திற்கும் இதன் பால் மிகவும் உகந்தது. மஞ்சள் நிறம் கொண்ட பசுவின் பால் பித்தநோய் போக்கும். வெண்ணிறப் பசுவின் பால் நல்ல குணத்தைக் கொடுக்கும். சிவந்த மற்றும் பலவண்ணம் கொண்ட பசுவின் பாலைக் குடிக்க வாயு பிரச்னை தீரும். கன்று ஈன்ற பசுவின் பாலை மட்டும் 16 நாட்களுக்கு குடிக்கக் கூடாது.
பாலுக்கு இல்லை விரதம்: சத்வம், ராஜஸம், தாமசம் என்ற மூன்று குணங்கள் மனிதனிடம் உள்ளன. மனத்தெளிவு, சாந்தம், அன்பு, அமைதி ஆகியவை சத்வகுணம். பரபரப்பு, ஆசை, கோபத்தை வெளிப்படுத்துவது ராஜஸ குணம். உற்சாகம் இன்றி எப்போதும் துாங்கி வழியும் நிலை, மந்த புத்தியாக இருப்பது தாமச குணம். இதில் சத்வம் நல்ல குணம், மற்ற இரண்டும் தீய குணம். நல்ல குணத்தோடு வாழ விரும்பும் சாதுக்கள் கூட பசும்பால் குடிக்கலாம் என சாஸ்திரம் அனுமதிக்கிறது. ஏனென்றால், அதன் மூலம் உடலும், மனமும் சாத்வீக குணத்தைப் பெறுகின்றன. அதனால், தான் விரதமிருப்பவர்களுக்கு பால் ஒரு திவ்ய உணவாக இருக்கிறது.