பதிவு செய்த நாள்
17
ஜன
2020
10:01
உடுமலை: கால்நடைகளின் நலன்வேண்டி உடுமலை ஆல் கொண்ட மால் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
கால்நடைகளின் நலன்வேண்டி உடுமலை ஆல்கொண்ட மால் கோவில் திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உடுமலை அருகேயுள்ள, சோமவாரபட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், தைப்பொங்கல் தமிழர் திருநாள் ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆல்கொண்டமால் கோவிலுக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, ஏராளமான விவசாயிகள், மாட்டுப்பொங்கல் முதல் மூன்று நாட்கள் வருகின்றனர். பாரம்பரிய வழிபாடுகால்நடை செல்வங்கள் செழிக்கவும், கால்நடைகளை நோய், நொடிகள் அண்டாமல் பாதுகாக்கவும், வேளாண் வளம் சிறக்கவும் விவசாயிகள், ஆல்கொண்ட மாலுக்கு, பால் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபடுவதையும், பாரம்பரிய வழிபாட்டு முறையாக கொண்டுள்ளனர். விழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான விவசாயிகள் ஆல்கொண்டமாலை வழிபட வருவதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. களைகட்டிய வளாகம் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவாரங்கள் விற்பனை கடைகள், தேங்காய், பழம், பூக்கடைகள், உணவு பண்டங்கள், மாடுகளுக்கு தேவையான கயிறுகள், உழவுக்குத்தேவையான உபகரணங்கள் விற்கும் கடைகள் நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ராட்டிணங்கள், சிறுவர் விளையாட்டுக்கருவிகள் என பொழுது போக்கு அம்சங்கள், தை பொங்கலுக்கே உரித்தான கரும்பு விற்பனைக்கடைகள் என சுற்றிலும், பல ஏக்கர் பரப்பளவில் கடைகளாக காணப்படுகின்றன.