பதிவு செய்த நாள்
17
ஜன
2020
11:01
வீரபாண்டி: காளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடனை செலுத்தினர். இளம்பிள்ளை, மோட்டூர், ஓம் சக்தி காளியம்மன் கோவில் தை திருவிழா, கடந்த, 14ல், விநாயகர் வீதியுலாவுடன் தொடங்கியது. அடுத்தநாள், 108 பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, பூங்கரகம், தீர்த்தக்குட ஊர்வலத்துடன், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விரதமிருந்த திரளான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இரவு, சப்பரத்தில் காளியம்மன் வீதி உலா நடந்தது. இன்று, அக்னி கரகம், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் நடக்கிறது. இரவு, வாண வேடிக்கையுடன் அம்மன் ஊர்வலம், வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. ஜன., 20ல், மஞ்சள் நீராட்டு விழாவுடன், திருவிழா நிறைவடையும். மேலும், பி.என்.பட்டி, சின்னகாவூர், மாரிமுதலி காட்டுவளவிலுள்ள, காளியம்மன் கோவில் பண்டிகையையொட்டி, நேற்று, ஏராளமான பக்தர்கள், அம்மன் சிலைகளுடன், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு, ஊர்வலமாகச் சென்றனர்.