பதிவு செய்த நாள்
17
ஜன
2020
03:01
அன்னூர்: அன்னூரில் கூத்தாண்டவர் திருவிழா நிறைவு நாளான இன்று பக்தர்கள் தரையில் படுத்து வேண்டுதலை அரவானிடம் சமர்ப்பித்தனர்.
அன்னூரில், கூத்தாண்டவர் திருக்கல்யாண திருவிழா, கடந்த 31ஆம் தேதி துவங்கியது. ஜன. 7ம் தேதி கோவில் முன் கம்பம் நடப்பட்டு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் 14-ஆம் தேதி வரை, தினமும் மாலையில் கம்பம் சுற்றி ஆடுதலும், பூவோடு எடுத்தலும் நடந்தது. 15ம் தேதி அரவானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாவிளக்கு எடுத்தல் நடந்தது. இன்று அதிகாலை 2 மணிக்கு அரண்மனை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதையடுத்து தர்மர் கோவிலிலிருந்து கூத்தாண்டவர் கோவிலுக்கு அம்பு வில் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து அரவான் மற்றும் அனுமார் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தனர். தர்மர் கோயிலில் அரவானுக்கு பாரதம் படித்து காண்பிக்கப்பட்டது. மதியம் களப்பலியாக, அரவான் போருக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கூத்தாண்டவர் கோவிலில் இருந்து துறைமுகம் செல்லும் வரை, செல்லும் வழியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தை பாக்கியம், திருமண வரம் உள்ளிட்ட வேண்டுதலுக்காக அரவான் செல்லும் பாதையில் படுத்து, கூத்தாண்டவரை வேண்டினர் . அம்பையும், அரவாணையும், அனுமனையும், கைகளில் ஏந்திய பக்தர்கள், பாதையில் படுத்திருந்த பெண் பக்தர்களை தாண்டியபடி சென்றனர். பெண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அரவானிடம் மனமுருகி வேண்டினர். இதையடுத்து அரவான், அன்னூர் சந்தை திடலிலுள்ள துறைமுகத்தில் சேர்க்கப்பட்டார். மாலையில் குன்னத்தூராம்பாளையம் கூத்தாண்டவர் கோயிலில் மறுபூஜை நடந்தது.