பதிவு செய்த நாள்
18
ஜன
2020
10:01
பல்லடம்: கரைப்புதூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த பூ பறிக்கும் விழாவில், பெண்கள் விளையாட்டு போட்டிகளுடன் குதூகலித்தனர்.
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான பூ பறிக்கும் விழா, கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஊர் பெரியவர்கள், வயதானவர்களின் அறிவுறுத்தலின்படி, கிராமங்களில் இன்றும், பூ பறிக்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லடத்தில் அடுத்த கரைப்புதூர் கிராமத்தில், பூ பறிக்கும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நேற்று, அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் கூடிய கிராம மக்கள், முதலில், மாகாளியம்மன், காமாட்சி அம்மனை வழிபட்டனர்.
சிறுவர், சிறுமியர், பெண்கள், தாய்மார்கள், மற்றும் மூதாட்டிகள் என, வயது வித்தியாசமின்றி, முறுக்கு, மிக்சர், இனிப்பு பண்டங்கள், பொரி உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை எடுத்து வந்தனர். அங்கிருந்து, செண்டை மேளம் முழங்க, கூடைகளை மேலே வீசி பிடித்தபடியும், அனைவரும் பூ பறிக்க புறப்பட்டனர். வழிநெடுக ஆவாரம் பூக்களை பறித்து சென்று, அங்குள்ள முனியப்ப சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவர் சிறுமியர், பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்ட அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகள் வென்றனர். அனைவரும், தாங்கள் கொண்டுவந்த தின்பண்டங்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து, கும்மியாட்டம், ஆடல், பாடல் என பொழுதைக் கழித்து, மாலை 7.00 மணிக்கு, பொங்கல் வைத்து வழிபட்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். அதேபோல், பல்லடத்தை அடுத்த பருவாய் கிராமத்திலும், பூ பறிக்கும் விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீவிநாயகர் கன்னிமார், கருப்பராய சுவாமி கோவிலில் ஒன்று கூடிய, ஊர் மக்கள், பொங்கல் வைத்து வழிபட்டு, பூ பறிக்க சென்றனர். கும்மியாட்டம் ஆடி, அன்பை பரிமாறிக்கொண்ட அனைவரும், உற்சாகத்துடன் விழாவை கொண்டாடினர்.