பதிவு செய்த நாள்
20
ஜன
2020
12:01
கோவை: ஜெயின் சமுதாயத்தைச் சேர்ந்த, ஐந்து இளம் பெண்கள் இரண்டு இளைஞர்கள் நேற்று துறவறம் பூண்டனர். கோவையில், 2 லட்சம் ஜெயின் சமூக மக்கள் வசிக்கின்றனர். இச்சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், இளைஞர்கள் பலர், துறவறம் மேற்கொள்வது வழக்கம்.
கோவை, தாமஸ் வீதி மற்றும் ரங்கே கவுடர் வீதியில் வசித்து வரும், ஐந்து இளம்பெண்கள், இரண்டு இளைஞர்கள் என, ஏழு பேர் நேற்று துறவறம் பூண்டனர். இவர்களில் ஐவர், ஒரே குடும்பத்தினர்.இதற்கான ஊர்வலம், கோவை ரங்கேகவுடர் வீதியில் துவங்கி, நேரு மகா வித்யாலயா பள்ளியை அடைந்தது. அங்கு அரண்மனை போன்று அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில், துறவறம் மேற்கொண்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அவர்கள், ஏழை, எளியவர்களுக்கு பழங்கள், உடைகள், இனிப்பு, ஆபரணங்களை தானமாக வழங்கினர். முன்னதாக நடந்த ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட ஒரு யானையும், எட்டு குதிரைகளும், எருது மற்றும் குதிரைகள் பூட்டிய மூன்று ரதங்களும் பங்கேற்றன. பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான ஜெயின் சமுதாய மக்கள் பங்கேற்றனர்.