கேரளத்தின் பம்பை நதிக் கரையில் மாணார் கிராமத்தில் திருக்குரட்டி பகுதியில் உள்ளது மகாதேவர் கோயில், உயர்ந்த மதில் மற்றும் கோபுரத்துடன் திகழும் இது, ஒரே இரவில் பூதகணங்களால் கட்டி முடிக்கப்பட்டது என்கிறார்கள்.
ஒருமுறை தட்ச யாகத்துக்குச் செல்ல, ஈசனிடம் அனுமதி வேண்டினார் பார்வதிதேவி, சிவபெருமான் மறுத்தார். பிறகு, பார்வதி தேவியின் வற்புறுத்துலுக்கிணங்க, அனுமதி தந்தார். தேவிக்குத் துணையாக நந்திதேவரையும் உடன் அனுப்பினார். அதன் பிறகு, ரௌத்ரத்துடன் புறப்பட்ட சிவபெருமான், திருக்குரட்டியில் வந்து குடியேறினார். நந்தி, பார்வதி தேவிக்குத் துணையாகப் போனதால், இங்கு நந்தி சிலை கிடையாது.
இந்தக் கோயிலில் சிவராத்திரி விழா விசேஷம். அப்போது 10 நாள்கள் சகஸ்ர கலச அபிஷேகம் நடைபெறுகிறது. நிறைவு நாளன்று பூசாரி, தீ மீது நடனமாடி வருவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு. இந்தக் கோயிலில் உள்ள பார்வதிதேவி சன்னிதி சிவராத்திரி நாளில் மட்டுமே திறக்கப்படும். இங்கு மகாவிஷ்ணுவுக்கும் ஒரு சன்னிதி உள்ளது. இவர், இஸ்லாமிய வியாபாரி ஒருவரை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றியதாகக் கதை உண்டு. இன்றும் கோயில் மதிலுக்கு வெளியே சந்தன ஊதுவத்தி ஏற்றி, முஸ்லிம்கள் வணங்கிச் செல்கிறார்கள்.