தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில், தஞ்சாவூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது பாபநாசம். இந்தத் தலத்தில், ராமபிரான் பிரதிஷ்டை செய்து பூஜித்து 108 சிவலிங்கங்களை தரிசிக்கலாம். ராமன் வழிபட்டதால் இங்கேயுள்ள சிவனாருக்கு ராமலிங்க ஸ்வாமி என்று திருநாமம், அம்பாளின் திருநாமம் பர்வதவர்த்தினி.
பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக, இந்தத் தலத்தில் ராமபிரான் சிவ பூஜை செய்து வரம் பெற்றார். எனவே இந்தத் தலம், பாபங்களை நாசம் செய்கிற தலம் என்கின்றன ஞான நூல்கள்.
ராமபிரானுக்காக, காசியம்பதியிலிருந்து அனுமனால் கொண்டுவரப்பட்ட சிவலிங்கமும் (அனுமந்த லிங்கம்) இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே, காசிக்கு நிகரான தலமாகத் திகழ்கிறது இது. இங்கு, சனீஸ்வர பகவான் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம் ரொம்பவே விசேஷம். இந்தத் தீர்த்தத்தில் நீராடி, ராமலிங்க ஸ்வாமி முதலான 108 சிவலிங்கத் திருமேனியையும் தரிசித்து, சனீஸ்வர பகவானுக்கு எள் நைவேத்தியம் செய்து, எள் தீப மேற்றி வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும்; சகல பாவங்களும் விலகும் என்பது ஐதிகம்!