ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சேதுபதி மன்னர்கள் தரிசித்த நாகநாதர் கோயில் பராமரிப்பின்றி முள் புதருக்குள் அழிந்து வருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயில் நாகநாதர் சுவாமி,சவுந்தரியவள்ளி அம்மன் கோயில். நுாறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சேதுபதி மன்னர்கள் முதலில் இக்கோயிலில் தரிசித்த பிறகே, ராமநாத சுவாமி கோயிலுக்குள் தரிசனம் செய்வது வழக்கம்.
பிரசித்த பெற்ற இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசித்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக கோயிலில் பூஜை செய்து பராமரிக்க இந்து அறநிலையத்துறை முன்வரவில்லை. இதனால் கோயிலை சுற்றி முள் புதர் வளர்ந்து விஷ ஜந்தகளின் புகலிடமாகவும், கோயில் கோபுரம் வர்ணம் இன்றி பொலிவிழந்தும், மேற்கூரைகள் சேதமடைந்து சன்னதிக்குள் மழைநீர் கசிந்து தேங்கியுள்ளது. மேலும் இரவில் சமூக விரோதிகள் புகுந்து மது போதையில் ரகளை செய்து அங்குள்ள நந்தி சிலை, அகஸ்தியர் சிலையை உடைத்துள்ளனர். இது குறித்து இக்கோயில் பக்தர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், கோயிலில் பட்டர், பரிசாரகர் நியமித்து தினமும் பூஜைகள் செய்து பராமரிக்கவும், புதுப்பிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.