மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவு: சபரிமலை நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2020 11:01
சபரிமலை: 60 நாட்கள் நடந்த மண்டல, -மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவு பெற்று சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. திருவாபரணங்கள் பந்தளம் திரும்பியது.
சபரிமலையில் ஜன.15-ல் மகரவிளக்கு விழா நடந்தது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடந்தது. ஜன.16 முதல் 19 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடந்தது. ஜன.19- காலை 10:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று மதியம் களபபூஜை நடந்தது.ஜன.20 காலை 5:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவுற்றது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடந்தது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் இந்த பூஜையை நடத்தினர்.நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி திலிப்குமார் வர்மா முன்னிலையில் கோயில் நடைஅடைத்த பின்னர் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி ஆகியோர் 18-ம் படி வழியாக கீழ்பகுதிக்கு வந்தனர். அங்கு கோயில் சாவியையும், பணமுடிப்பையும், மன்னர் பிரதிநிதியிடம் மேல்சாந்தி கொடுத்தார். அவர் அதை மீண்டும் அவரிடமே கொடுத்து, வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும், என்று கூறி திருவாபரணங்களுடன் திரும்பி சென்றார்.இனி மாசி மாத பூஜைகளுக்காக பிப்.13-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.