பதிவு செய்த நாள்
22
ஜன
2020
03:01
ஒரே திருக்கோயிலில் சிவனும் பெருமாளும் அருளும் தலங்கள் பல உண்டு. ஆனால், ஒரே கருவறையில் அவர்கள் இருவரும் அருளும் கோயில் ஆபூர்வம். நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகேயுள்ள அனந்தநல்லூர் கிராமத்தில், அனந்தவல்லி அம்பாள் சமேத அனந்தீஸ்வரர் திருக்கோயிலில், ஹரனையும் ஹரியையும் ஒரே கரு வறையில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது!
சோழர்கள் காலத்தில் அந்தணர்கள் அதிகம் வசித்த இவ்வூரில், மிகப் பெரிய
திருக்கோயிலாகத் திகழ்ந்து, காலப்போக்கில் சிதிலமுற்றுப்போனதாம் இந்த கோயில். சமீபத்தில் அன்பர்கள் கைங்கர்யத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
தசாவதாரம் எடுத்து பராக்கிரமங்கள் பல புரிந்த மகாவிஷ்ணு, தனக்கு ஆத்மபலம் குறைந்து வருவதை உணர்ந்தார். ஆகவே, தன் குருவான சுத்தவாக்கிய ரிஷியைச் சந் தித்து, மீண்டும் ஆத்மபலம் - ஆத்ம ஞானம் பெறுவதற்கான வழியைக் கேட்டார்.’பூவுலகில் அனந்தநல்லூரில் சுயம்பு லிங்கமாக அருளும் சிவனாருக்கு ஒரு மண்டல காலம் வில்வார்ச்சனை செய்து, தவம் இயற்றி வந்தால் ஆத்மபலம் அடையலாம்’ என்றார் ரிஷி. அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்து வழிபட்டு பலனடைந்தார் என்கிறது தலவரலாறு. பெருமாளின் திருப்பெயர், அனந்த நாராயணர். கருவறைக்கு இடப்புறம் விநாயகரும் வலப்புறத்தில் முருகனும் அருள்கின்றனர். அம்பாள் அனந்தவல்லி தெற்கு நோக்கி சன்னிதி கொண்டிருக்கிறாள். காலபைரவர் மேற்கு நோக்கி அருள்கிறார்.
இத்தலத்தின் மகிமைகளை விவரித்தார், கோயிலில் பூஜித்துவரும் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த முரளி குருக்கள்.
“நவகிரகங்கள் சிருஷ்டி செய்யப்படுவதற்கு முன்பே சுயம்புவாய் தோன்றிய ஈசன்
இங்குள்ளவர். ஆகவே, இங்கு நவகிரக வழிபாடு இல்லை. ஈசனே நவகிரக நாயகனாகத் திகழ்கிறார். இவர் தனம், தான்யம் செழித்து வளர அருள்பாலிப்பவர். அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் பிரச்னை தீரும். வம்பு, வழக்கு, கோர்ட்டு பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் அன்பர்கள் அஷ்டமியில் பைரவரை வண ங்கினால், சரியான தீர்வும் வழக்குகளில் வெற்றியும் கிடைக்கும். மொத்தத்தில், இத்தலத்துக்கு வந்து சிவனையும் பெருமாளையும் ஒருசேர சேவிக்கும் பாக்கியம், பேரானந்த பெருவாழ்வைத் தரும்” என்றார்.
நன்னிலம் - திருமலைராயன்பட்டினம் செல்லும் சாலையில், கொந்தகை பேருந்து நிலையத்தில் இறங்கினால், வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. ஆட்டோ வசதியுண்டு.