பெங்களூரு அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஓரே நாள் மட்டும் திறக்கப்படும் - அதிசயங்கள் பல நிறைந்த ஹாசன் அம்பாள் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கு விக்ரகம் எதுவும் கிடையாது. அதற்குப் பதிலாக சின்ன சின்னதாக மூன்று கற்கள் மட்டுமே மூலவராக வணங்கப்படுகிறது. இவை ஹாசன் அம்பாள் என்று அழைக்கப்படுகிறது.
வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே இக்கோயில் திறக்கப்படும்போது, மூலவரான அந்த மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் படிந்திருக்கும். அந்த சந்தனத்தைமுழுவதும் அகற்றி விட்டு, அபிஷேகம் செய்வார்கள். மேலும், ஸ்வாமிக்கு அருகே உள்ள இரண்டு பெரிய நெய் தீபங்களிலுள்ள நெய்யை அகற்றி விட்டு புதிதாக நெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள்.
இதில் அதிசயம் என்னவென்றால், இப்படி புதிதாக ஏற்றிய நெய் தீபம், அடுத்த ஆண்டு கோயில் திறக்கும்வரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்கமாம்.
மேலும் பல அதிசயங்களும் இந்தக் கோயிலில் உண்டு. முதலில் சொன்னது போல் ஸ்வாமியின் மீது இருக்கும் சந்தனம் அகற்றப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழ ங்கப்படும். இந்த சந்தனம் ஸ்வாமி மீது இயற்கையாகவே ஏற்படுகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு ஸ்வாமிக்கு சுடச்சுட அன்னம் நைவேத்தியம் செய்யப்படும். மேலும், ஸ்வாமிக்கு முன் ஒரு குடம் தண்ணீரும் வைக்கப்படுகிறது.
ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோயில் திறக்கும் போது குடத்திலுள்ள தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபம் அணையாமல் சுடர்விட்டு பிரகாசித்தபடி இருக்கும். ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுடச்சுட இருக்கும். ஸ்வாமியின் மீதுள்ள சந்தனத்தை முழுவதும் எடுத்துவிட்டு, அபிஷேகம் செய்து முடித்து வெறும் கற்களாகத்தான் நடை சாற்றப்படுகிறது. ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோயில் திறக்கும்போது மூன்று ஸ்வாமிகள் (கற்கள்) மீதும் சிவப்பு வண்ணத்தில் சந்தனம் நிரம்பி இருக்கும். இந்த அதிசயங்கள் எப்படி நிகழ்கின்றன என்று இதுவரை யாராலும் கண்டறிய முடிய வில்லை.