டிச.27ல் தான் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: கோவில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2020 11:01
காரைக்கால்: திருக்கணித பஞ்சாங்கம் படி இன்று (ஜன.,24ல்) சனிப்பெயர்ச்சி என கூறப்பட்டு வந்தது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் படி வருகிற 27.12.2020ல் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது என்றும், வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றும் திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்கள் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருகிறது. இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. சனிப்பெயர்ச்சி விழாவில் இந்தியாவில் பல்வேறு பகுதியில் இருந்து பல லட்சம் பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு வருகின்றனர்.இந்நிலையில் இம்மாதம் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதனால் நேற்று கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் சனிப்பெயர்ச்சி விழா குறித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாக்கள் அனைத்தும் அசல் சுத்த வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படியே கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த சனிப்பெயர்ச்சி விழா (19.12.2017) மார்கழி மாதம் 4ம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.01 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் நிகழ்வு நடைபெற்றது. இவ்வாண்டு சனிப்பெயர்ச்சி விழா எதிர்வரும் சுபமங்கள சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலதேதி (27.12.2020) அதிகாலை 5.22 மணிக்கு நிகழவுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் எனவே பக்தர்கள் தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.