திருச்சி திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 30ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும் தைப்பூசத் திருவிழா 30ம் தேதி காலை 8:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் மாரியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்ரவரி 8ம் தேதி காலை 7 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளும் மாரியம்மன் வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று அன்று மாலையில் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.
இரவு 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து மாரியம்மனுக்கு மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படும். பிப்ரவரி 9ம் தேதி காலை மீண்டும் நொச்சியம் மண்ணச்சநல்லுார் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளும் அம்மன் இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.