பதிவு செய்த நாள்
25
ஜன
2020
11:01
தர்மபுரி: தை அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில், பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை மாதத்தில் வரும் அமாவாசை, முக்கிய அமாவாசையாக கருதப்படுகிறது. தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்தால், அனைத்து நாள்களுக்குமான தர்ப்பணம் புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம். இந்தாண்டுக்கான தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று, தர்மபுரி அடுத்த இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், இங்குள்ள மதேஸ்வரன் மற்றும் அம்மன் கோவில்களில் வழிபட்டனர். நேற்று காலை முதலே தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். இவர்கள், தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோருக்கு எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். பின், இவற்றை ஆற்றில் கரைத்து விட்டு, நீரில் மூழ்கி முன்னோர்களை வழிபட்டனர். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள இந்த தென்பெண்ணை ஆற்றில், இரண்டு மாவட்டங்களில் இருந்தும், தர்ப்பணம் கொடுக்க நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.